Published : 26 Dec 2014 09:47 AM
Last Updated : 26 Dec 2014 09:47 AM

மா சே துங் 10

சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர், சிறந்த ராஜதந்திரி மா சே துங் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 சீனாவின் ஷாவ்ஷான் கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 6 வயதில் விவசாய வேலைகள் பார்த்தார். 13 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு முழு நேர விவசாயி ஆனார்.

 ‘வேர்ட்ஸ் ஆஃப் வார்னிங்’ என்ற நூலைப் படித்து சீனாவின் பலவீனங்கள், மேற்கத்திய நாடுகளின் வலிமைகளைப் பற்றி அறிந்துகொண்டார். 6 மாத காலம் ராணுவ அனுபவம் பெற்றவர்.

 இவருக்கு 18 வயது இருக்கும்போது, சீனா குடியரசாக அறிவிக்கப்பட்டது. அங்கு நிலையான, ஒற்றுமையான அரசு ஏற்படவில்லை. இந்நிலையில் இடதுசாரி அரசியல் கொள்கைகள் இவரைக் கவர்ந்தன. 1920-ல் கொள்கைப் பற்றுமிக்க பொதுவுடைமையாளர் ஆனார். விரைவில் பொதுவுடைமைக் கட்சியின் உயர் அதிகாரக் குழு உறுப்பினர் ஆனார்.

 ஆட்சியைப் பிடிப்பதில் சீனப் பொதுவுடைமைக் கட்சி படிப்படியாக முன்னேறியது. அந்த காலகட்டத்தில் ஆட்சியை எதிர்த்து தனது ஆதரவாளர்களுடன் நீண்ட நடைபயணம் மேற்கொண்ட இவர், 8 ஆயிரம் மைல் தூரத்தைக் கடந்தார்.

 1935-ல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு கட்சி நல்ல வளர்ச்சி பெற்றது.

 அரசை எதிர்த்து நீண்ட நெடிய போர் புரிந்தார். கட்சி வெற்றி பெற்றது. 1949-ல் சீனா குடியரசு நாடானது. மக்கள் சீனக் குடியரசின் முதல் அதிபராக மா சே துங் பதவி ஏற்றார். அப்போது இவருக்கு வயது 56.

 சீனாவின் பொருளாதார நிலை அப்போது அதல பாதாளத்தில் இருந்தது. பழைய மரபுகளில் ஊறிக் கிடந்த பல கோடி மக்கள் படிப்பறிவில்லாமல் இருந்தனர். புதிய சீனாவைப் படைக்கும் மாபெரும் பணி இவர் முன்பு மலைபோல் எழுந்து நின்றது. ‘வலிமையும் வளமும் மிக்க சீனா.. முன்னோக்கியப் பெரும் பாய்ச்சல்’ என்ற மகத்தான தொலைநோக்குடன் நாட்டு முன்னேற்றத் துக்காகப் பாடுபட்டார்.

 செல்வாக்கு படைத்த தலைவராக ஆதிக்கம் செலுத்திய இவரது ஆட்சிக் காலத்தில் சீனா அடியோடு மாறியது. தொழில்மயமாக்கல், கல்வி வளர்ச்சி, விவசாயம், பொது சுகாதாரம் ஆகியவற்றில் நாடு முன்னேற்றம் கண்டது. அரசியல் பொருளாதாரப் புரட்சி மட்டுமின்றி சமூகப் புரட்சியையும் தூண்டினார்.

 நாட்டு மக்களிடையே தீவிர தேசப் பற்றை உண்டாக்கினார். நாடு நவீனமயமானது. பல நூற்றாண்டு கால அந்நிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு, 20-ம் நூற்றாண்டில் சீனா மகத்தான வளர்ச்சி கண்டது.

 சீனாவில் பெரும் தொழிற்புரட்சியும், வேளாண் புரட்சியும் நிகழ்த்திய மா சே துங் ஒரு புரட்சிகரத் தலைவர் மட்டுமின்றி, தற்போதைய சீன வல்லரசின் சிற்பியாகவும் போற்றப்படுகிறார். இவரது கொள்கைகள் மாசோயிசம் என்று புகழ்பெற்றன. 83-வது வயதில் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x