Published : 07 Sep 2016 10:15 AM
Last Updated : 07 Sep 2016 10:15 AM

மம்மூட்டி 10

பிரபல மலையாள நடிகர்

தேசிய விருதை மூன்றுமுறை வென்ற பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி (Mammootty) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் அருகே நடுத்தரக் குடும்பத்தில் (1951) பிறந்தவர். இயற்பெயர் முகமது குட்டி. தந்தை விவசாயி. பள்ளிப் பருவத்திலேயே குடும்பம் எர்ணாகுளத்தில் குடியேறியது. எர்ணாகுளம் புனித ஆல்பர்ட்ஸ் பள்ளி, அரசுப் பள்ளியில் பயின்றார்.

*கொச்சி மஹாராஜாஸ் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று, சட்டப் பயிற்சியும் பெற்றார். 1971-ல் கல்லூரியில் படித்தபோது, ‘அனுபவங்கள் பாலிச்சகள்’ என்ற படத்தில் நடித்தார். 1973-ல் ‘காலச்சக்கரம்’ படத்தில் நடித்தார். இவை பெரிதாக பேசப்படவில்லை. 1979-ல் முன்னணி வேடத்தில் நடித்த ‘தேவலோகம்’ திரைப்படம் திரையிடப்படவே இல்லை.

*எம்.ஆசாத் 1980-ல் இயக்கிய ‘வீல்கனுண்டு ஸ்வப்னங்கள்’தான் இவரது முதல் குறிப்பிடத்தக்க திரைப்படம். தொடர்ந்து கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய ‘மேலா’ திரைப்படத்தில் நடித்தார். ‘த்ருஷ்ணா’ இவருக்கு கதாநாயக அந்தஸ்தை வழங்கியது. 1982-ல் நடித்த ‘யவனிகா’ என்ற த்ரில்லர் படம் இவருக்கு பல வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது.

*தொடர்ந்து இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றிகளை ஈட்டி, மலையாளத் திரையுலகின் வெற்றி நாயகனாக இவரை உயர்த்தின. தமிழ், இந்தி, தெலுங்கிலும் முத்திரை பதித்தார். 1989-ல் ‘மவுனம் சம்மதம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

*‘தளபதி’, ‘கிளிப்பேச்சு கேட்கவா’, ‘மக்களாட்சி’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘ஆனந்தம்’ ஆகியவை தமிழில் குறிப்பிடத்தக்கவை. 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘மதிலுகள்’ என்ற இவரது திரைப்படம் சுமார் 40 சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. ‘டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர்’ படத்தில் நடித்த இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

*தொடர்ந்து சினிமா, தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சித் தயாரிப்பு, விநியோக நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். கேரள அரசின் அட்சயா தகவல் தொழில்நுட்ப விரிவாக்கத் திட்டத்தின் நல்லெண்ணத் தூதராகவும் செயல்படுகிறார்.

*மற்றவர்களுக்கு உதவும் குணம் படைத்தவர். குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் பிச்சை தொழில் ஒழிப்பு, ஏழைகள் மறுவாழ்வு போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படும் பல்வேறு அமைப்புகளில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.

*இவரது ரசிகர் மன்றம் சார்பில் இலவச கண் பாதுகாப்பு மற்றும் சிசிச்சை முகாம்கள் நடத்தப்படுகின்றன. பல ஆண்டுகளாக பல்வேறு பத்திரிகைகளில் தான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘காழ்ச்சப்பாடு’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டார்.

*பத்மஸ்ரீ விருது, 3 முறை தேசிய விருது, 5 முறை மாநில அரசின் விருது, 10-க்கும் மேற்பட்ட ஃபிலிம்ஃபேர் விருதுகள், 10-க்கும் மேற்பட்ட கேரள ஃபிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருதுகள், 5 முறை ஏஷியாநெட் திரைப்பட விருதுகள் என ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். கோழிக்கோடு மற்றும் கேரள பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தன.

*இன்று 65 வயதை நிறைவு செய்யும் மம்மூட்டி, வெள்ளித்திரையில் மட்டுமின்றி, பல்வேறு நலப்பணிகளைச் செய்துவருவதன் மூலம் நிஜ வாழ்விலும் கேரளாவின் சூப்பர் ஸ்டாராக போற்றப்படுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x