Published : 17 Oct 2016 01:20 PM
Last Updated : 17 Oct 2016 01:20 PM

பா.ரஞ்சித் தயாரித்த ஆவணப்படங்களின் தனித்தன்மை என்ன?

நீலம் அமைப்பின் மூலமாக இயக்குநர் ரஞ்சித் 'சாதிகளிடம் ஜாக்கிரதை', 'டாக்டர். ஷுமேக்கர்' எனும் இரண்டு ஆவணப்படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை சாதிகளிடம் ஜாக்கிரதை, டாக்டர். ஷுமேக்கர் என்ற இரண்டு ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டு திரையிடப்பட்டன.

சாதிகளிடம் ஜாக்கிரதை

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் மாவட்டத்தின் மிர்ச்பூர் கிராமத்தில் 2010 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை 'சாதிகளிடம் ஜாக்கிரதை' எனும் ஆவணப்படத்தின் மூலம் ஆவணப்படுத்தியுள்ளனர்.

40 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படமானது அக்கிராமத்தின் தற்போதைய நிலையை நம்மிடையே காட்டுகிறது. கலவரத்தோடு தங்களது கிராமங்களை விட்டு இடம்பெயர்ந்த தலித்துகளின் நிலையை அவர்களது வாழ்க்கைப் போராட்டத்தை மிகையாக இல்லாமல் சரியாக ஆவணப்படுத்தியுள்ளனர்.

இந்த கலவரத்தோடு தொடரப்பட்ட வழக்கு, அவ்வழக்கினை நடத்தும் வழக்கறிஞருக்கு ஏற்பட்ட மிரட்டல்கள், அந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு பின்பு மறுபடியும் ஹரியானா உயர்நீதி மன்றத்திற்கே மாற்றப்பட்ட விவகாரம் என அது சார்ந்த விவரங்களையும் ஆவணப்படுத்தியுள்ளது.

கலவரத்துக்குப் பின் தற்போது வரை செயல்பாட்டாளர் வேத் பால் தன்வர் பண்ணை இடத்தில் தலித் மக்கள் வசித்து வருவதைப் பார்க்கும்பொழுது நமது இந்தியாவின் கொடூரமான சாதிய முகத்தைப் பார்க்க முடிகிறது. கலவரத்துக்குப் பின் தலித் குழந்தைகளின் கல்வி, பெண்களின் திருமணம், வேலைவாய்ப்பு, மக்களது வாழ்வியல் சிக்கல்கள், மக்களின் சுகாதாரம், மக்களது பாதுகாப்பு போன்றவறையும் ஆவணப்படுத்த தவறவில்லை.

ஆவணப்படத்தில் இவ்வழக்கு சார்ந்து மூத்த வழக்கறிஞர் ஒருவர் கேட்கும் கேள்வி நம்து இந்திய ஜனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது. இது போன்ற துணிச்சலான பல்வேறு முயற்சிகள் ஆவணப்படம் முழுதும் காணப்படுகிறது. அனைத்து காட்சிகளும் தலித் மக்கள் தற்போது தங்கியிருக்கும் இடத்திலும், பழைய மிர்ச்பூர் கிராமத்திலும் எடுக்கப்பட்டிருப்பது ஆவணப்படத்தை தூக்கி நிறுத்துகிறது.

மற்ற ஆவணப்படங்களைப் போல இல்லாமல் தமிழிலேயே சப்டைட்டில் போட்டது மிகப்பெரிய ஆறுதல் . சலிப்பு ஏற்படாமல் பார்ப்பதற்கு இந்த தமிழ் சப்டைட்டில் மிகப்பெரிய உதவியாக இருந்தது. மேலும் ஆவணப்படத்தை பாதிக்கப்பட்டவர்களின் நிலை, வழக்கு விவரம் என ஒவ்வொரு பாகங்களாகப் பிரித்து சொல்லியது நல்ல யோசனை. படம் நெடுகிலும் நல்ல ஒலியமைப்பு ஆவணப்படத்தின் தாக்கத்தை அதிகப்படுத்தியது. படக்குழுவினர் அனைவருமே நன்றாக வேலை செய்துள்ளனர் என்பதை ஆவணப்படத்தைப் பார்க்கும்பொழுதே தெரிகிறது. இதனை ஜெய்குமார் இயக்கியுள்ளார்.

டாக்டர். ஷுமேக்கர்

இதற்கு முன்னதாக முதலவாதாக திரையிடப்பட்ட டாக்டர். ஷுமேக்கர் ஆவணப்படமானது வில்லிவாக்கத்தில் வசிக்கும் இம்மானுவேல் எனும் கால்பந்தாட்ட ஷூக்களைத் தைப்பவரைப் பற்றி விவரிக்கிறது. அவர் அப்பகுதி விளையாட்டு வீர்ர்களின் கால்பந்தாட்ட ஷூக்களை (பூட்) தைத்துக்கொடுக்கும் தொழிலைச் செய்பவர். அவர் எப்படி அத்தொழிலைத் தேர்ந்தெடுத்தார். அதனால் அவருக்கு நேர்ந்த அனுபவங்கள், அத்தொழிலின் மூலம் அவருக்கு கிடைக்கும் லாபம் என அவரது வாழ்க்கையை ஆவணப்படுத்தியுள்ளனர்.

சிறுவர்களிடம் தைத்த ஷூவிற்கு எவ்வளவு காசு வாங்குகிறார், கால்பந்தாட்ட ஷூவை எப்படி தைப்பது என்றும் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார் என்பது போன்ற விஷயங்களையும் ஆவணப்படத்தில் பதிவு செய்கின்றனர். இம்மானுவேலை மட்டுமல்லாது அவரது குடும்பத்தினரையும் இதில் ஆவணப்படுத்தியுள்ளனர். அந்த வேலையைச் செய்வதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் குறித்தும் ஆவணப்படத்தில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தனது 56 வது வயதிலும் கூட அந்த வேலையை விடாப்பிடியாக செய்வதற்கான காரணத்தை அவர் சொல்வது அருமை. கால்பந்தாட்டத்தின் மீதான காதலே அவரைத் தொடர்ந்து கால்பந்தாட்ட ஷூக்களைத் தைக்க வைத்திருக்கிறது என்பதை அழகாக ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளனர்.

இப்போதும் வேலையை முடித்துவிட்டு கால்பந்தாட்டம் ஆடாமல் அவர் இருப்பதில்லை. இம்மானுவேலைப் பற்றி கால்பந்தாட்டப் பயிற்சியாளர்கள் ஒவ்வொருவரும் கூறும் கருத்துகள் அவரது காலபந்தாட்ட காதலைப் பதிவு செய்கிறது. அவரைப் பற்றி மட்டுமே பேசாமல் கால்பந்தாட்டம் சென்னையில் யாரால் அதிகம் ஆடப்பட்டு வருகிறது, அதற்கான மதிப்பீடுகள் சமூகத்தில் எவ்வாறு உள்ளன, அக்கால்பந்தாட்டத்தை நேசிக்கும் வீர்ர்களின் நிலை என்ன? என்பதையும் ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளனர்.

ஆரம்பத்தில் ஒளிப்பதிவு தடுமாறினாலும் போகப்போக அருமையாக இருக்கிறது. படத்தொகுப்பு நன்றாக இருக்கிறது. முழுக்க முழுக்க தமிழிலேயே இவ்வளவு சுவாரசியமான ஆவணப்படத்தை பார்ப்பதென்பது இதுவே முதல்முறையாக இருக்கக் கூடும். இந்த ஆவணப்படத்தை T.J.பாண்டிராஜ், வினோத் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.

இரண்டுமே மிகத்தீவிரமான ஆவணப்படங்களே. ஆனால் அதனை சலிப்படைய வைக்காமல் எடுத்த விதம் அருமை. விழாவில் மிர்ச்பூரை சேர்ந்த சத்யவான் மற்றும் எரினா ஆகியோரும் கலந்து கொண்டனர். ஷூமேக்கரான இம்மானுவேலும் விழாவில் கலந்து கொண்டு பேசினார். மேலும் இவ்விரு ஆவணப்படங்களை இயக்குநர் ரஞ்சித் தயாரித்துள்ள காரணத்தாலேயே தமிழில் ஆவணப்படங்களுக்கான ஒரு வெளி என்பது உருவாகியிருக்கிறது.

தமிழில் ஆவணப்படங்களுக்கான வெளி என்பது மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இயக்குநர் ரஞ்சித் 'சாதிகளிடம் ஜாக்கிரதை', 'டாக்டர். ஷூ மேக்கர்' எனும் இரண்டு ஆவணப்படங்களைத் தயாரித்துள்ளார். இரண்டுமே வெவ்வேறு வகையில் தனித்தன்மையோடு விளங்குகின்றன.

சாதிகளிடம் ஜாக்கிரதை ட்ரெய்லர்