Published : 12 Jun 2015 06:46 PM
Last Updated : 12 Jun 2015 06:46 PM

நெட்டெழுத்து: முகநூலில் முகம் நூறு காட்டும் வித்யா!

இப்போதெல்லாம் நமக்கு தெரிந்த 10 பேரில் 2 பேர் போட்டோகிராபர்களாக இருக்கிறார்கள். ஆளாளுக்கு ஒரு ஃபேஸ்புக் பேஜ், ஒரு ப்ளாக், ஒரு கார்ட், ஒரு டிஜிட்டல் கேமரா, நான்கைந்து லென்ஸுகள் வைத்துக்கொண்டு ஸ்டூடியோவே இல்லாமல் இந்த வாடகை, லொட்டு லொசுக்கு போன்ற தொந்தரவும் இல்லாமல் அழகாக மாதத்திற்கு ஒரு சில ப்ராஜக்டுகளை எடுத்துக்கொண்டு ஆயிரக்கணக்கில் காசு பார்ப்பதாக சொல்கிறார்கள். எந்த சுபநிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும் 20-30 வயதுக்காரர்கள் தான் காப்பி குடிக்கும் ப்ளாஸ்க் போல நீண்டதொரு கேமராவைக்கொண்டு கேண்டிட் போட்டோகிராபி என்று கலக்குகிறார்கள்!

இந்தப் பதிவைப் படிக்கும்போதே, மனசு ப்ளாஸ்கை மன்னிக்கவும் கேமராவை உருவகப்படுத்திக்கொண்டு விடுகிறது.

கல்லூரி வாழ்க்கை, களப்பணி, கல்லூரி, சினிமா, இடையிடையே கேலி, கிண்டல்கள், முகநூல் என பெரும்பாலும் இந்த எளிமையான வட்டத்திலேயே சுழன்றாலும், மற்றவர்களைப் படிக்கத் தூண்டுகிற லாவகமான எழுத்து வசப்பட்டிருக்கிறது வித்யா விஜயராகவனுக்கு. எழுத்தினூடே மெலிதாக இழையோடும் ஒரு வித நகைச்சுவை ஒரு வேளை அதற்குக் காரணமாக இருக்கலாம்.

கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருக்கும் வித்யா, சமூக சேவகியும் கூட. தன் நண்பர்களுடன் சேர்ந்து, சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வுப் பாடம் சொல்லிக் கொடுப்பவர்.

தனது வயதுக்கே உரிய உணர்வுகளை கேலி, கிண்டல், கோபம் கொஞ்சம் சமூக அக்கறை கலந்து பேசும் எழுத்துகள் வித்யாவுடையது.

இந்தக் காலத்தில் டீன்-ஏஜ் தாண்டிய இளம்பெண்கள், சுதந்திரம் என்பதை எப்படிப் பார்க்கிறார்கள் என்ற இவரின் பதிவு, சுதந்திரம் மீது வேறு ஒரு கோணத்தை முன்வைக்கிறது. | வாசிக்க - >கோமணச் சுதந்திரம் |

நம் மக்களுக்கு ஏன் "முடியாது, வேண்டாம்" என்பதை முதலிலேயே சொல்ல முடிவதில்லை? ஏன் கூட்டத்தோடு கோவிந்தா போட விரும்புகிறார்கள் என்று கேள்வியெழுப்பி, ஒரு அமைப்புக்கோ, இயக்கத்துக்கோ, தன்னார்வலர்களைத் திரட்டுவதில் உள்ள சிக்கல்களை நகைச்சுவையாய்ப் பட்டியலிடுகிறார் வித்யா. | வாசிக்க - >ஓர் அமைப்பு / இயக்கம் நடத்துவதில் பல சிக்கல்கள் |

அறிவாளிகள் முட்டாள்களாகிக் கொண்டிருக்கிறார்கள். முட்டாள்கள் அடிமுட்டாள்களாக்கப்படுகிறார்கள். ஒட்டுமொத்த தலைமுறையின் மொத்த சிந்தனைத் திறனும் மழுங்கடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எல்லாரும், தான் அறிவாளியென நம்பவைக்கப்பட்டு வருகிறார்கள். இதன் பிரதிபலிப்பு இன்னும் சில வருடங்களில் தெரியும் என்னும் வித்யா, சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் ஓட்டைகள் உள்ளதாக சில கருத்துகளை முன்வைக்கிறார். | வாசிக்க - >சமச்சீரும் ஸ்டேட் ரேங்க் வாங்கிய 441 பேரும் |

அன்னூர் சாலைகளில், காந்திபுரம் பேருந்து நிலையத்தில், மேட்டுப் பாளையம் ரயில் நிலையத்தில் என வித்யாவின் பதிவுகளில் அவ்வப்போது கோவை மண்ணின் மணம் கமகமக்கிறது.

ஒருவரின் வாழ்க்கையை மற்றொருவர் எப்போதும் வாழ முடியாது என்பதை அழகாய் மனிதர்களை உதாரணமாகக் கொண்டு, பொருந்தாச் செருப்பு என்னும் பதிவின் மூலம் நம் மனதில் பதிய வைக்கிறார் வித்யா. | வாசிக்க - >பொருந்தா செருப்பு |

தூக்கம் ஒரு வரமென்பேன். அன்றாடப் பிரச்சனைகளையும் சிக்கல்களையும் சிறிது நேரத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு ராயல் பெங்கால் டைகர்களுடனும் டிராகுலாக்களுடனும், நெருப்பு உமிழும் டிராகன்களுடனும் ஏலியன்களுடனும் சண்டை போட்டு பூமியைக் காப்பாற்றும் மாபெரும் சவால்களை கனவில் எதிர்கொண்டு கனவுலகின் டிக்டேட்டராக வாழ உறக்கம்தான் வாய்ப்பு தருகிறது என்று சொல்லும் வித்யா, தன் உறக்க சுகானுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். | வாசிக்க - >கண்களை மூடி படிக்கவும் |

உங்களை விட பத்து பதினைந்து வயது பெரியவர் எதாவது சொன்னால் கொஞ்சமாவது கேட்பீர்கள். உங்கள் வயதை ஒத்தவர் சொன்னால், அதுவும் எதிர்பாலினத்தவர் வந்து நீங்கள் மனதோடு யோசிப்பவற்றை, வெளியில் பேசத் தயங்குபவற்றைப் பேசினால் கவனிப்பீர்களா என்ன? என பாலியல் வன்முறைக்கு எதிராக தான் வகுப்பெடுக்கும் போது, கண்டு கொள்ளாமல் இருக்கும் மாணவர்களுக்கும் ஆதரவாகப் பேசுகிறார் வித்யா. | வாசிக் >க - ஏரியா பிரித்தல் |

மார்க்கெட்டிங் கால்கள் வரும்போது எப்படிப் பேசுவீர்கள்? அழைப்பின் மறுபக்கம் இருப்பவர் மீது எதிர்வினையாற்றுவது சரியாகுமா? இவ்வாறு அழைப்பு விடுப்பவர்களின் சூழல் எப்படி இருக்கும்? என்று அவர்கள் பக்க நியாயத்தையும் யோசிக்கிறார். வாசிக்க- >போன் கால்

சற்றே நீண்ட கட்டுரைகளைத் தாண்டி, குறும்பதிவுகளிலும் நம்மை ரசிக்க வைக்கிறார் வித்யா.

கொலைப்பசி நேரத்தில் கிடைக்கும்

இரண்டு ரூபாய் போண்டாவும் மூன்று ரூபாய் டீயும் கூட

புல் மீல்ஸுக்கு சமம்.

உபயம் - போத்தனூர் ரெயில்வே கேண்ட்டீன்.



உலகின் ஆகச் சிறந்த ஆக்வர்டான சூழ்நிலை என்னவென்றால், முகநூலில் நம்மை வேவு பார்த்து வதந்திகள் கிளப்பும் எவரை ப்ளாக் செய்து வைத்திருக்கிறோமோ, அந்த நபர் நேரில் சந்திக்கும் போது, நாம் ப்ளாக் செய்து வைத்திருக்கிறோம் என்பதை அறிந்துகொண்ட பின்னரும், "ஆமா மச்சி உன் ஐடி என்ன ஆச்சு?" எனக் கேட்பதுவேயாகும்.

‪#‎இந்த‬ மாசத்துல மட்டும் மூணு அக்கா, ரெண்டு பொண்ணுங்க, ஒரு அங்கிள் கேட்டுட்டாங்க. உசாரய்யா உசாரு! — ஃபீலிங் ஃபேஸ்புக்கா அப்டின்னா என்ன?



அம்மா ஊருக்கு gone

வித்யா சமையல் on!

‪#‎எல்லோரும்_தாழ்வான_பகுதியை_நோக்கி_ஓடுங்கள்‬



வீட்டை விட்டு நான்கடி எடுத்து வைக்காத என்னை "இந்த வாரமாவது வீட்டுல இருப்பியா இல்ல வழக்கம் போல வெளிய தானா"என பிறர் கேட்குமளவிற்கு சுற்ற பழக்கியவர்கள். சுற்றுவது என்றால் மால்களும் தியேட்டர்களும் என்பதை மாற்றி கிராமம் கிராமமாக ஒவ்வொரு அரசுப்பள்ளியாக சுற்ற காரணமானவர்கள் இவர்களே என்று தன் தோழிகளையும் அறிமுகப்படுத்துகிறார்.

மொத்தத்தில் சிரிக்கவும் வைத்து, சிந்திக்கவும் வைக்கிற முக்கியமான முகநூல் பதிவர்களில் வித்யா விஜயராகவனும் ஒருவர்.

முந்தைய அத்தியாயம்- >நெட்டெழுத்து: பல தளங்களில் பிரித்து மேயும் கிரி!

| நீங்கள் வாசித்து வரும் நல்ல வலைப்பூ, ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களைப் பரிந்துரைக்க ramaniprabhadevi.s@thehindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு இணைப்புகளை அனுப்பலாமே! |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x