Published : 10 May 2017 10:46 AM
Last Updated : 10 May 2017 10:46 AM
நான் வழிப்போக்கன்
வழிகள்
என் முகவரிகள்
*
மழையில்
நனைவது
எப்போதும் இருக்கும்
மழை நீர்
அருந்துவது
எனக்குப் பிடிக்கும்
*
இளைப்பாறும் போதெல்லாம்
நான் நிழலுடன்
பேசுகிறேன்
மனம் மரத்துடன்
பேசுகிறது
*
என் பயணம்
அடைதலில் இல்லை
தொடர்தலில் இருக்கிறது
*
‘வெகுதூரம்
வந்த பின்னும்
வெகுதூரம்
இருக்கு இன்னும்’
இந்த வரி
அதிகம்
உறங்க விடுவதில்லை
*
வேகமான நடையில்
இமை மூடித் திறக்க
முடிகிறது தூக்கம்
*
கால்களுக்கிடையில்
முடிகின்றன
நெடும் பயணத்தின்
சிறு பயணங்கள்
*
காதுகளை நிரப்புகிறது
காற்றின் பாடல்
அதில் நான்
கலந்துபோன
ஒரு சொல்
*
கை வீசி நடக்கிறேன்
பிரபஞ்சத்தைப்
பின்னுக்குத் தள்ளி,
பிரபஞ்சத்தோடு
கை கோர்த்து
பிரபஞ்சத்தை
எதிர்கொண்டு!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT