Published : 10 Nov 2015 01:55 PM
Last Updated : 10 Nov 2015 01:55 PM

சுரேந்திரநாத் பானர்ஜி 10

இந்திய விடுதலை வீரர், பேச்சாளர்

இந்திய அரசியல் இயக்கத்தை உருவாக்கியவரும், இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவருமான சுரேந்திரநாத் பானர்ஜி (Surendranath Banerjee) பிறந்த தினம் இன்று (நவம்பர் 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l புரட்சிகரமான எண்ணங்கள் கொண்ட டாக்டரின் மகனாக கல்கத் தாவில் (1848) பிறந்தார். பேரன்ட்டல் அகாடமிக் இன்ஸ்டிட்டியூட், இந்து கல்லூரியில் பயின்றார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தார்.

l சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். வயதைக் காரணம் காட்டி, அவரது வெற்றியை ரத்து செய்தனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். சில்ஹட் நகரில் துணை மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். பின்னர் அதில் இருந்தும் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து இங்கிலாந்துக்கு சென்று முறையீடு செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

l இந்தியர்களை பாரபட்சமாக நடத்தும் ஆங்கில அரசை எதிர்க்க தீர்மானித்தார். மக்கள் உரிமைகளைப் பெறவும், அநீதியில் இருந்து காத்துக்கொள்ளவும், அரசு நிர்வாகத்தில் பங்கு பெறவும் ஓர் அமைப்பு அவசியம் என்று கருதினார்.

l கல்கத்தா திரும்பியதும் மெட்ரோபாலிட்டன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1882-ல் ரிப்பன் கல்லூரியை (தற்போதைய சுரேந்திரநாத் கல்லூரி) தொடங்கி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இப்பணியில் 37 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபட்டார். தீவிர அரசியலில் ஈடுபட்டபோதும், கற்பிக்கும் பணியை நிறுத்தவில்லை.

l ஆனந்தமோகன் போஸுடன் இணைந்து இந்திய தேசிய அமைப்பை 1876-ல் தொடங்கினார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் இந்திய மாணவர்களின் வயது வரம்பு பிரச்சினைக்கு இதன்மூலம் தீர்வு கண்டார். ஆங்கில அரசின் இன வேறுபாட்டை எதிர்த்து நாடு முழுவதும் போர்க் குரல் எழுப்பினார்.

l ‘பெங்காலி’ என்ற ஆங்கில நாளிதழை 1878-ல் தொடங்கினார். இதில் ஆங்கில அரசுக்கு எதிராக எழுதியதால் கைது செய்யப்பட்டார். இந்திய தேசிய காங்கிரஸ் 1885-ல் தொடங்கப்பட்டது முதல், அதில் முக்கியப் பங்கு வகித்தார். தனது அமைப்பை அதனுடன் இணைத்தார்.

l வளர்ந்துவந்த தலைவர்களான கோபால கிருஷ்ண கோகலே, சரோஜினி நாயுடு போன்றவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். காங்கிரஸ் தலைவராக 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

l போராட்டம், பொதுக்கூட்டம், மனு கொடுப்பது, சட்டரீதியிலான நடவடிக்கை என மிதவாதப் போக்கையே பின்பற்றினார். வங்கப் பிரிவினைக்கு இவர் தெரிவித்த எதிர்ப்பு, அரசியல் வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. சுதேசி இயக்கத்தின் முக்கியத் தூணாக செயல்பட்டார்.

l ஆங்கிலத்தில் உரையாற்றுவதில் வல்லவர். சரளமான, ஆழமான சொல்லாற்றல் இவரை சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக பிரகாசிக்க வைத்தது. ஆங்கிலேயரும் மதித்துப் போற்றும் தலைவராக விளங்கினார். வங்காள அரசில் அமைச்சராகப் பணிபுரிந்தபோது, கல்கத்தா மாநகராட்சி நடவடிக்கைகளில் ஜனநாயக நெறிகளை பிரதிபலிக்கச் செய்தார்.

l அரசியல் களம் மாறியது. சில தலைவர்களின் தீவிரவாதப் போக்கை இவரால் ஜீரணிக்க முடியவில்லை. காந்திஜியின் ஒத்துழையாமை இயக்க முறையைக்கூட ஏற்க மறுத்தார். ஒரு கட்டத்தில் தீவிர அரசியலில் இருந்து விலகினார். ‘வங்காளத்தின் முடிசூடா மன்னன்’, ‘சரண்டர் நாட் பானர்ஜி’ என்று புகழப்பட்ட சுரேந்திரநாத் பானர்ஜி 77-வது வயதில் (1925) மறைந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x