Published : 30 Oct 2015 11:16 AM
Last Updated : 30 Oct 2015 11:16 AM

எப்படி? இப்படி! 26 - பட்டை தீட்டப்பட்டத் திட்டம்!

108 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.702 கோடி) என்பதுதான் உலகிலேயே மிக அதிக மதிப்பில் நடத்தப்பட்ட வைரத் திருட்டு!

வைரங்களால் பிரபலமான நாடு பெல்ஜியம். அங்கே ஜெம் மாகாணத்தில் அண்ட்வெர்ப் டைமண்ட் சென்டர் மிகவும் பரபரப்பானது. நகரத்தின் 80 சதவீத மக்கள் வைரம் தொடர்பான வேலைகளில் இருப்பவர்கள். உலகத்துக்குத் தேவைப்படும் 84 சதவீத வைரம் உருவாகும் இடம் இது. 380 வைரத் தொழிற்சாலைகள் வைரங்களைத் தயாரித்து 1,500 நிறுவனங்களுக்கு சப்ளை செய்கின்றன. இங்கே இயங்கும் வைரத்தரகர்கள் மட்டும் 3,500 பேர்.

அண்ட்வெர்ப் டைமண்ட் சென்டர் என்பது இரண்டு மாடிகளும் அண்டர் கிரவுண்டும் கொண்டது. அங்கேதான் ஷேஃப்ட்டி லாக்கர்கள் அடங்கிய பாது காப்பு அறை உள்ளது. அந்த லாக்கர்களை பொதுமக்களும், வர்த்தகர்களும் வைரம், தங்கம், பணம், பத்திரங்களை பாதுகாக்க உபயோகித்தார்கள்.

இந்தக் கட்டிடத்துக்கும் பாதுகாப்பு அறைக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக நவீனமானவை. வானத்தில் எப்போ தும் போலீஸாரின் ஹெலிகாப்டர் ஒன்று சுற்றிக் கொண்டேயிருக்கும். ஆயுதம் ஏந்திய வீரர்கள் வாகனங்களில் உலா வருவார்கள். கட்டிடத்துக்கு அருகில் குண்டு துளைக்க முடியாத போலீஸ் பூத். இன்னொருபுறம் ஒரு போலீஸ் ஸ்டேஷன். பொல்லார்ட்ஸ் என்றழைக்கப்படும் இரும்புக் கம்பங்கள் சாலைகளின் குறுக்கில் அமைக்கப்பட்டிருக்கும். வாகனங்கள் அவ்வளவு சுலபமாக கட்டிடத்தை நெருங்கிவிட முடியாது. வெளி கேட்டில் எல்லா அடையாள அட்டைகளும் சரியாக இருந்தால், அவர்கள் இயக்கியதும் இந்த இரும்புக் கம்பங்கள் தரையோடு இறங்கிக் கொண்டு வாகனத்துக்கு வழி தரும்.

கட்டிடத்தை 24 மணி நேரமும் கேமராக்கள் பல கோணங்களில் படம் பிடித்துக் கொண்டேயிருக்கும். அந்தப் பாதுகாப்பு அறைக்குச் செல்வதற்கு முன்பாக இரண்டு கதவுகள். கண்ட்ரோல் அறையில் இருந்து அனுப்பப்படும் சங்கேத ஓசையைக் கேட்ட பிறகே கதவுகள் திறக்கும். பிரதான பாதுகாப்பு அறையின் முக்கியமான கதவு ஸ்டீல் மட்டும் காப்பரால் செய்யப்பட்டது. அந்தக் கதவின் எடை மூன்று டன். அந்தக் கதவை இயந்திரம் கொண்டு டிரில் செய்து திறக்க முயன்றால் இடைவிடாமல் 12 மணி நேரம் மிக சக்தி வாய்ந்த இயந்திரம் செயல்பட வேண்டும். அந்தக் கதவைத் திறக்க சாவியும் போட வேண்டும். அந்த சாவியின் சைஸ் என்ன தெரியுமா? கிரிக்கெட் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கும்போது, அடையாளமாக பெரிய சைஸில் ‘அட்டை சாவி' செய்து கொடுப்பார்கள் அல்லவா, அந்த மாதிரி நிஜத்தில் ஒரு மீட்டர் நீளம் கொண்ட சாவி அது.

தவிர லாக்கர்களின் உரிமையாளர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாகத் தரப்பட்டுள்ள நான்கு இலக்க ரகசிய எண்களையும் பதிய வேண்டும். இதைத் தவிர, அந்தப் பகுதியில் மனித உடலில் இருந்து வெளிப்படும் வெப்பத்தைக் கண்டுபிடித் தால் எச்சரிக்கும் இன்ஃப்ராரெட் ஹீட் டிடெக்டர்ஸ், புதிய அசைவுகள் மற்றும் வெளிச்சம் தென்பட்டால் எச்சரிக்கும் சென்சார், அந்தப் பிரதேசத்தின் தட்பவெப்பத்தில் மாறுதல் ஏற்பட்டால் உடனே அறிவிக்கும் சீஸ்மிக் சென்சார், இதைத் தவிர கதவை அனுமதியின்றி முறையில்லாமல் திறக்க முயற்சி செய் தால் அதை அறிவிக்கும் காந்த மண்டலம்.

2003 பிப்ரவரி 14 அன்று பெல்ஜியம் தேசம் காதலர் தினத்தைக் கொண்டாடியது. மறுநாள் இரவில் இத்தனை பிரமாண்டமான ஏற்பாடுகளை மீறி அந்த வைர மையத்தின் பாதுகாப்பு அறை கொள்ளையடிக்கப்பட்டது.

தகவல் அறிந்து காவல்துறை வந்து பார்த்தபோது அந்தப் பாதுகாப்பு அறையில் இருந்த 160 லாக்கர்களில் 123 லாக்கர்கள் டிரில்லிங் இயந்திரம் மூலம் திறக்கப்பட்டிருந்தது.

அந்த லாக்கர்களின் உரிமையாளர்களும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் ஆய்வாளர்களும் குவிந்துவிட்டார்கள். இதுதான் உலகிலேயே மிக அதிக மதிப் பில் அடிக்கப்பட்ட லாக்கர் கொள்ளை.

கொஞ்சம் தாவி ஒரு ஃப்ளாஷ்பேக்குக்குச் சென்று வரலாம். அவன் பெயர் லியார்னாடோ நோடார்பார்டோலோ. இத்தாலியைச் சேர்ந்தவன். ‘பார்ன் கிரிமினல்’ என்பார்களே அப்படி சிறு வயதிலேயே சின்னச் சின்ன திருட்டுக்களில் தன் குற்றலீலைகளைத் தொடங்கி, நகைக் கடைகளில் கொள்ளையடிப்பதைத் தொழிலாகவே செய்துவருபவன்.

பழம்பொருள் சேகரிப்பாளர் ஒருவர் 2001-ல் ஒரு குறிப்பிட்ட நகையைக் கொள்ளையடித்துத் தரச் சொன்னார். அவனுக்கு பேசப்பட்ட சம்பளம் ஒரு லட்சம் யூரோ கரன்சிகள். லியார்னாடோ புத்திநுட்பம் கொண்ட பல துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த சிலரை கூட்டணியாக அமைத்துக்கொண்டு, அந்தக் கொள்ளையை சிறப்பாக செய்து முடித்தான்.

அடுத்து அவனுக்கு வந்த அழைப்பு வேறு ஒரு நபரிடம் இருந்து. ஒரு ரகசிய இடத்தில் சந்தித்தபோது, அங்கிருந்த மூன்று பேரை அந்த நபர் அறிமுகப்படுத்தினான். இந்த லாக்கர்களைக் கொள்ளையடிக்கும் திட்டத்தைச் சொல்லி, அதை தலைமையேற்று நடத்தித் தரச் சொன்னான். லியானார்டோ தன் பக்கத்தில் இருந்து ஒரு நபரைச் சேர்த்துக் கொண்டான். ஐந்து பேர் கொண்ட படை உருவானது. அழகாக திட்டம் போட்டு படிப்படியாக நிறைவேற்றினான். இதற்கு அவன் எடுத்துக் கொண்ட காலம் இரண்டரை வருடங்கள்.

முதல் வேலையாக, அந்தப் பாதுகாப்பு அறையில் தன் பெயரில் ஒரு லாக்கர் எடுத்துக்கொண்டான். அவனுக்கு அடையாள அட்டைகள் தரப்பட்டன. அவன் அடிக்கடி தன் லாக்கரை இயக்க அங்கு சென்று வரத் தொடங்கினான். அந்த இடத்தின் அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவனுக்கு அத்துப்படியாயின.

ஒரு மீட்டர் நீளம் உள்ள அந்த சாவியின் சரியான டூப்ளிகேட்டை ஐவரில் ஒருவன் செய்து முடிக்கவே சில மாதங்களாயின. சின்ன கேமராவை மறைவாகப் பொருத்தி அந்த நான்கு இலக்க பாஸ்வேர்டு எண்களை கச்சிதமாகக் அறிந்தான் லியார்னாடோ. ஒவ்வொரு சென்சார்களையும் கேமராக்களையும் எப்படி ஏமாற்றுவது என்று பாடம் படித்தார்கள். எலெக்ட்ரானிக் செயல்பாடுகளை முறியடிக்கும் கருவிகளை உருவாக்கினார்கள். பாலியெஸ்டர் ஷீல்ட் வெப்பத்தை ஏமாற்றும் என்று புரிந்து அதைச் செய்தார்கள்.

அலுமினியம் பிளாக் செய்து அதைக் கொண்டு காந்த மண்டலத்தைக் கட்டுப்படுத்தினார்கள். பெண்கள் கூந்தலுக்காகப் பயன்படுத்தும் சாதாரண ஸ்ப்ரே மூலம் சில சென் சார்களை கவிழ்க்க முடியுமென்றும், பீன் பேக்குகளில் நிரப்பப்படும் பின் பால்ஸ் மூலம் கேமராக்களை ஏமாற்ற முடியும் என்றும் கண்டறிந்து சின்னச் சின்ன கருவிகள் செய்தார்கள். போலி அடையாள அட்டைகள், இரும்புக் கம்பங்களை இயக்கும் கருவி என்று கச்சிதமான ஏற்பாடுகள். அதற்குத்தான் இரண்டரை வருடங்கள்!

சரி, இதெல்லாம் உலகத்துக்கு எப்படித் தெரிய வந்தது?

இவையெல்லாம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கைது செய்யப்பட்ட பிறகு லியானார்டோவே சொன்னவை. ஆம்! லியானார்டோவும், இவன் ஏற்பாடு செய்த நபரும்தான் மாட்டிக் கொண்டார்கள். திட்டத்தின் சூத்திரதாரியும் அவன் ஏற்பாடு செய்த மூன்று பேரும் கொள்ளையடிக்கப்பட்ட அத்தனை வைரங்கள், நகைகளுடன் தலைமறைவாகிவிட்டார்கள். அவர்கள் இந்த நிமிடம்வரை கண்டுபிடிக்கப் படவில்லை. அந்த நகைகளும் மீட்கப்படவில்லை.

இந்த லாக்கர் கொள்ளையைப் பற்றி ஒரு விரிவான புத்தகம் ‘ஃப்ளாலெஸ்’ என்னும் தலைப்பில் எழுதப்பட்டிருக்கிறது. ஹாலிவுட்டின் பாரமவுன்ட் நிறுவனத்தினர் இந்த சம்பவத்தைத் திரைப்படமாக எடுக்க உரிமை வாங்கியிருக்கிறார்கள்.

எல்லாம் சரி! இவ்வளவு சாமர்த்திய மாக இரண்டரை வருடங்கள் திட்டம் போட்டு கொள்ளையை செயல்படுத்திய லியார்னாடோ எப்படி போலீஸில் சிக்கினான்?

லியார்னாடோ செய்த ஒரு மிகப் பெரிய முட்டாள்தனம்… கொள்ளை நடந்த அறையில் லாக்கர்களை மற்றவர்கள் டிரில்லிங் இயந்திரம் கொண்டு திறந்துகொண்டு இருந்தபோது எடுத்துச் சென்ற சாண்ட்விச்சை சாப்பிட்டுத் தொலைத்ததுதான். அதிலிருந்து அவ னுடைய எச்சிலுடன் கூடிய ஒரு பிரெட் முனை கீழே விழுந்துகிடக்க… அதிலிருந்து டி.என்.ஏவை எடுத்த போலீஸ் மிக சீக்கிரமே அவனை நெருங்கிவிட்டது. கொள்ளையர்களுக்கு லியார்னாடோ தெரிவிக்கும் அறிவுரை என்பது ‘கொள்ளை சமயத்தில் எதையும் தின்று வைக்காதீர்கள்’ என்பதாக இருக்குமோ?

- வழக்குகள் தொடரும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pkpchennai@yahoo.co.in

முந்தைய அத்தியாயம்: > எப்படி? இப்படி! 25 - நல்லவளா? கெட்டவளா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x