Published : 08 May 2015 10:21 AM
Last Updated : 08 May 2015 10:21 AM

எப்படி? இப்படி!- 1

குற்றங்களைக் கண்டுபிடித்தது தொடர்பாக ஓர் அலசல் தொடர்...

தொடர்’வதற்கு முன்..

அன்புள்ள உங்களுக்கு…

வணக்கம்.

பள்ளி நாட்களில் இருந்தே துப்பறியும் கதைகளில் எனக்கு ஆர்வம் அதிகம். முத்து காமிக்ஸ் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்த காலம். ‘இரும்புக் கை மாயாவி’-க்கு ரசிகர் மன்றம் வைக்காததுதான் பாக்கி. துப்பறியும் கதாபாத்திரங்களில் தேவனின் சாம்பு என்னை வெகுவாக கவர்ந்தார். பிறகு, சுஜாதாவின் கணேஷ்-வஸந்த். கல்லூரி காலத்தில் ஜேம்ஸ் ஹாட்லி சேஸின் பைத்தியமானேன். ஜெய்சங்கர் நடித்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் படங்களை விடாமல் பார்ப்பேன். அவர்தானே அப்போது தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்!

ஒரு படத்தில் சி.ஐ.டியான ஜெய்சங்கர் தன் நண்பருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருப்பார். இருவரும் வெளியே புறப்படும்போது ஒரு சிறிய காகிதத் துண்டை மடக்கி கதவின் ஓரத்தில் செருகி வைத்து கதவை மூடுவார். ‘என்ன செய்கிறாய்?’ என்று நண்பர் கேட்பார். ‘வா, சொல்கிறேன்’ என்று அழைத்துப் போவார். வெளியே வேலை முடிந்து இருவரும் திரும்புவார்கள். அந்த மடக்கப்பட்ட துண்டு சீட்டு கீழே கிடக்கும். ‘யாரோ கதவைத் திறந்தி ருக்காங்க’ என்பார் ஜெய். எனக்கு ‘அட’ என்று இருந்தது.

இதுபோல சின்னச் சின்ன ஐடியாக்களை எங்கே படித்தாலும், பார்த்தாலும், பேசினாலும் நான் ரசிக்கத் தொடங்கினேன். நான் கதை எழுதத் தொடங்கியபோது ‘அட’ என்று நினைக்க வைக்கிற கதைகள் அதிகம் எழுத வேண்டும் என்று ஆர்வப்பட்டேன்.

நான் எழுதிய முதல் சிறுகதையான ‘அந்த மூன்று நாட்கள்’ கதையில் அரைக் கிறுக்காக நடித்து ஒருவனை நம்ப வைத்து, அவனுக்கே தெரியாமல் கடத்தி வைத்து, அவனுடைய பெற் றோரை பிளாக் மெயில் செய்து பணம் பெற்றபின் அவனை விடுவிப்பான் ஒருவன். தான் கடத்தப்பட்டதோ, தன்னை வைத்து மிரட்டி பணம் வாங் கப்பட்டதோ தெரியாமல் கூலாக வீட்டுக்குத் திரும்பி பெற்றோர் சொன்ன பிறகுதான் உணர்வான் அவன்.

இந்த முதல் கதை எனக்குப் பெற் றுத் தந்த பாராட்டுக்கள்தான் என் னைத் தொடர்ந்து எழுத வைத்தது பரத், சுசிலா என்கிற துப்பறியும் ஜோடியை உருவாக்க வைத்தது. அவர்கள் காத லித்துக்கொண்டே துப்பறிந்தார்கள். இப்போதும் என்னைச் சந்திக்கும் வாசகர் கள் அவர்களை நலம் விசாரிக்கிறார்கள்.

துப்பறியும் கதைகளை எழுதும்போது எக்ஸ்ட்ரா லார்ஜ் ஆர்வம் சேர்ந்து கொள்ளும். செஸ் விளையாடுவது போல மூளை துறுதுறுக்கும். ஒரு புதி ருக்கு விடை தேடுவது எப்படி சுவாரஸ் யமான விஷயமோ அதுபோல சுவாரஸ் யமான புதிரை உருவாக்குவது இரண்டு மடங்கு சுவாரஸ்யமான விஷயம்.

‘Who Done it?’ என்கிற குற்றத்தை யார் செய்தது என்று கண்டுபிடிக்க வைக்கும் வகையான கதைகளில் பல கதாபாத்திரங்களின் மேல் சந்தே கத்தை விதைப்பதும், இறுதியில் ஒரு எதிர்பாராத முடிவைத் தருவதும் சவாலான வேலை. படிக்கும்போது பரபரப்பாக இருக்க வேண்டும் என்றால் எழுதும்போது கொஞ்சம் மண் டையை உடைத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.

இப்போது குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதில் விஞ்ஞானத்தின் பங்கு அதிகமாக இருக்கிறது. மிகவும் குயுக்தி யான, விசித்திரமான உத்திகளுடன் குற்றங்களை செய்கிறார்கள் என்றால், அதை கண்டுபிடிப்பதிலும் அதே மாதிரி நுணுக்கமான புத்திசாலித்தனமான அணுகுமுறை அவசியமாகின்றன.

இந்தியாவின் உளவு ஸ்தாபனமான ரா (RAW), யுரேனியத்தைப் பயன் படுத்தி பாகிஸ்தான் அணு ஆயுத ஆராய்ச்சி நடத்தி வருவதை ரகசியமாக உளவு பார்த்து, அப்போது பிரதம ராக இருந்த மொரார்ஜி தேசாயிடம் தெரி வித்தது. இந்தத் தகவலை ’ரா’ எப்படி கண்டுபிடித்தது தெரியுமா? பாகிஸ் தானின் அணு ஆராய்ச்சி நிகழும் கவுட்டா ஆராய்ச்சி நிலையம் அமைந்திருக் கும் பகுதியில் உள்ள சலூன்களில் வெட்டப்படும் தலைமுடிகளை சேகரித்து அதை கதிரியக்க ஆராய்ச்சி செய்து இந்தமுக்கியமான தகவலைக் கண்டுபிடித்தது.

பல குற்ற வழக்குகளில் குற் வாளிகளைக் கண்டுபிடிக்க சின்ன தடயங்களே உதவியாக இருந்திருக் கின்றன. சில வழக்குகளில் அந்தத் தடயங்கள் உடனடியாக கிடைக் காமல் 10 ஆண்டுகளுக்குப் பிறகுகூட கிடைத்திருக்கின்றன. கற்பனை களைவிடவும் உண்மைகள் வித்தியாச மானவை என்பார்கள்.

இந்தத் தொடரில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நிகழ்ந்த பல வகையான குற்ற வழக்குகளில் குற்ற வாளிகளை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று விரிவாக பார்க்கலாம். அத்தோடு இலவச இணைப்பாக நான் எழுதிய துப்பறியும் கதைகளில் கையாண்ட சில உத்திகளைப் பற்றியும் எழுத இருக் கிறேன்.

‘எப்படி? இப்படி!’ என்கிற புதிய தொடர் ‘அட’ என்று உங்களை புருவம் உயர்த்த வைக்கும். அல்லது ‘அடப் பாவிகளா!’ என்று அங்கலாய்க்க வைக் கும். அடுத்த வெள்ளி முதல் வாரா வாரம் சந்திப்போம். அதுவரை ஏற்கெனவே வணக்கம் கூறிவிட்டதால் ‘காத்தி ருங்கள்’ என்று மட்டும் கூறுகிறேன்.

பிரியங்களுடன்,

பட்டுக்கோட்டை பிரபாகர்

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pkpchennai@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x