Last Updated : 28 Jan, 2017 02:05 PM

 

Published : 28 Jan 2017 02:05 PM
Last Updated : 28 Jan 2017 02:05 PM

என்னருமை தோழி...!- 21: ‘வாத்தியாரை பார்த்துக்கோம்மா!’

எம்.ஜி.ஆர். பிரம்மாண்டமான ஒரு படத்தில் உங்களை முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்ததற்கு முன்பாக தேசிய அளவிலும் தமிழக அளவிலும் கவனிக்க வேண்டிய ஒரு புதிய சூழல் உருவாகி இருந்தது.

1969... இந்த வருடம்தான் இந்திய துணைக் கண்டத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. தமிழகத்தின் பெரும் தலைவரான பேரறிஞர் அண்ணா, இரண்டு வருடங்களாக முதல்வராக திகழ்ந்து, திடீரென்று இந்த ஆண்டில் பிப்ரவரி மாதம் மூன்றாம் நாள் காலமானார்.

இதே 1969-ம் வருடம்தான், பழம்பெரும் பேரியக்கமான காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது. பிரதமராக இருந்த இந்திரா காந்தி தலைமை யிலும் மூத்த தலைவர்களான காமராஜர், நிஜலிங் கப்பா மற்றும் சஞ்சீவ ரெட்டி உள்ளிட்ட தலைவர் கள் தலைமையிலும் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. வங்கிகள் தேசியமயம், மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற முற்போக் கான திட்டங்களை இந்திரா செயல்படுத்தினார்.

இந்த ஆண்டில்தான், எம்.ஜி.ஆரும் அது வரை தான் பயணித்திருந்த கலையுலக பாதையை சற்றே மாற்றி, புதிய உணர்வுகளு டனும், எண்ணங்களுடனும், தனது திரைப்படங் களை உருவாக்க நினைத்தார். படங்களின் மூலம் அதிக வீரியத்துடன் தனது கொள்கை களையும் பிரச்சாரங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல அவர் முடிவெடுத்ததும் 1969-ம் வருடத்தில்தான்.

அந்த வருடம், எம்.ஜி.ஆர். நடித்து வெளி யான முக்கியமான இரண்டு படங்களிலும் நீங்களே கதாநாயகி. பெற்றால்தான் பிள்ளையா, படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து, எம்.ஆர். ராதாவினால் எம்.ஜி.ஆர், சுடப்பட, அதன் பிறகு ‘அரச கட்டளை’ படத்தில் மீண்டும் அவர் நடிக்கத் துவங்கினார். அப்போது, படப்பிடிப்பு இடைவேளையின்போது நிகழ்ந்த சில சுவையான சம்பவங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து, கூட்டம் கூட்டமாக வண்டிகளை வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரைக் காண மக்கள் கூட்டம் வருவது வழக்கம். அம்மாதிரி மக்கள் வந்த போது, ஒரு மூதாட்டி எம்.ஜி.ஆரை அணைத்து, அவர் முகத்தை கையால் வழித்து திருஷ்டி சுற்றி கண்ணீர் விட்டுக் கதறினார். ‘‘ராசா! உன்னை போய் சுட்டாங்களே..!’’ என்று அந்த மூதாட்டி பாசத்துடன் அரற்றியதை வியப்புடன் நீங்கள் கவனித்துக் கொண்டிருந்தீர்கள்!

எம்.ஜி.ஆரைக் காண வந்த கூட்டம், உங்களுக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, ‘‘வாத்தியாரை பத்திரமாக பார்த்துக்கோம்மா...’’ என்று சொல்லிவிட்டுப் போனதையும் வியப் புடன் கவனித்து வைத்துக் கொண்டீர்கள். அம்மாதிரி தருணங்களில் உணர்ச்சிவசப்பட்ட எம்.ஜி.ஆரின் கண்களும் கலங்கியிருந்தன.

ஒருநாள் இதுபற்றி எல்லாம் பேச்சு வந்தபோது, எம்.ஜி.ஆரும் மிக நெகிழ்ந்திருந்த தருணத்தில், ‘‘பெருந்தலைவர் காமராஜர், ஒரு மாணவர் தலைவரிடம் விருதுநகர் தொகுதி யில், 1,285 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது ஏன் என்று இப்போதுதான் தெரிகிறது.. ’’ என்று நீங்கள் பேச்சு வாக்கில் சொன்னீர்கள். 1967-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தலைவர் காமராஜர், தி.மு.க. மாணவர் தலைவர் பி.சீனிவாசனிடம் தோற்றது பெரும் பரபரப் பினை ஏற்படுத்தியிருந்தது.

நீங்கள் இவ்வாறு கூறியதும், எம்.ஜி.ஆரின் புருவங்கள் உயர்ந்தன. ‘‘இந்தி எதிர்ப்பு பிரச் சாரத்தினாலோ, காங்கிரஸ் கட்சி அரிசி பஞ் சத்தை சரியாகக் கையாளவில்லை என்ப தாலோ, தி.மு.க.வுக்கு மக்கள் வாக்குகளை அள்ளித் தந்ததாக எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் சுடப்பட்டதால் எழுந்த அனுதாபம்தான் வெற்றிக்கு முக்கிய காரணம்’’ என்று நீங்கள் கூறியபோது எம்.ஜி.ஆர். அதனை ஒப்புக்கொள்ளவில்லை!

‘‘நீங்கள் வேண்டுமானால், உங்களைக் காண வரும் மக்களிடம் பேசிப் பாருங்கள். அவர்களது உணர்வுகளை சோதித்துப் பாருங்கள்...’’ என்று நீங்கள் விடாப்பிடியாகச் சொல்ல, எம்.ஜி.ஆரும் மக்கள் கருத்தோட்டத்தை அறிய முடிவு செய்தார். பாம்படம் போட்டு வெள்ளை நார்மடி சேலையில் வந்து இறங்கிய மூதாட்டிகளிடம், ‘‘எதற்காக உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்தீர்கள்?..’’ என்று எம்.ஜி.ஆர் கேட்க, ‘‘மகாராசா! என்னய்யா இப்படி கேட்டுப்புட்டீங்க! உங்களைப் போயி சுட்டாங்களே...’’ என்று மூதாட்டிகள் எம்.ஜி.ஆரை சுற்றி நின்று கலங்கினார்கள்.

குறிப்பாக விருதுநகரிலிருந்து சிலர் வந்தபோதும், இதே கேள்வியை எம்.ஜி.ஆர். கேட்டார்! ‘‘அவ்வளவு பெரிய தலைவரை தோற்கடிச்சுட்டீங்களே?’’ என்று அவர் வினவ, ‘‘பின்னே... உங்களைச் சுட்டுப்புட்டாங்களே.. அது தப்புனு காட்டத்தான் சூரியனுக்கு ஒட்டு போட்டோம்.! ’’ என்று பதில்கள் வந்தன.

1969-ல் பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பின் மு.கருணாநிதி முதல்வராகியிருந்த நேரம்... ‘அடிமைப் பெண்’ மற்றும் ‘நம் நாடு’ திரைப் படங்கள் அந்த வருடத்தில் வெளியிடப்பட்டன. குறிப்பாக ‘நம் நாடு’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்கேற்ப வசனங் கள், பாடல்கள், பஞ்சாயத்து தேர்தலில் அவர் வெற்றி பெறுவது என்று அரசியல் நெடி அதிகமாக இருந்தது!

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு நாவலர் நெடுஞ்செழியன்தான் சீனியாரிட்டி முறையில் முதல்வராக பதவி ஏற்றிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க.வின் தேர்தல் நிதிக்கு எம்.ஜி.ஆர் நன்கொடை அளிக்க முன்வந்த போது, அண்ணா அவரிடம் நிதியைப் பெற்றுக் கொள்ள மறுத்து, ‘‘தம்பி! உன் நிதி எங்கும் போய்விடாது. தேர்தல் பிரசாரத்தில் உனது முகத்தை வந்து காட்டினாலே போதும்.. தொகுதிக்கு 30,000 வாக்குகள் கிடைக்கும்’’ என்று கூறியிருந்தார். அந்த அள வுக்கு அண்ணாவின் நம்பிக்கையையும் மக்க ளின் அன்பையும் பெற்றிருந்த எம்.ஜி.ஆரின் ஆதரவு பெற்றவரே முதல்வர் ஆக முடியும் என்கிற நிலை இருந்தது!

இதை உணர்ந்து, கருணாநிதியும் எம்.ஜி.ஆரின் ஆதரவினை நாட, அவரும் முழு மனதோடு தனது ஆதரவை கருணாநிதிக்கு அளித்தார். ஒரு சில முணுமுணுப்புக்கள் இருந்தாலும் அதையெல்லாம் சுலபமாகக் கடந்து கருணாநிதி முதல்வரானார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் குணமாகி வந்த பிறகு, ஏற்கனவே பாதியில் நின்றிருந்த ‘அடிமைப் பெண்’ பட வேலைகளை எம்.ஜி.ஆர். மீண்டும் துவக்கினார். அதுவரை எடுக்கப்பட்டிருந்த காட்சிகளில், ஜீவா பாத்திரத் தில் சரோஜாதேவி நடித்திருந்தார். நீங்களோ பவளவல்லி என்கிற அரசி பாத்திரத்தில் நடித் திருக்க, முத்தழகி என்கிற இளவரசி பாத்திரத் தில் கே.ஆர். விஜயா இடம் பெற்றிருந்தார்.

மீண்டும் புதிதாக அந்த படத்தை எம்.ஜி.ஆர். முழு மூச்சோடு தயாரிக்கத் துவங்கினார். துப்பாக்கிச்சூடு காரணமாக எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், ‘இனிமேல் படங்களில் அவரால் நடிக்க முடியாது’ என்ற செய்தி பரவியது. அந்த சமயத்தில், ‘‘எம்.ஜி.ஆருடன் இனி சரோஜா தேவி நடிக்க மாட்டார்’’ என்று சரோஜா தேவியின் தாயார் அறிவித்த நிலையில், ‘அடிமைப் பெண்’ படத்தில் இருந்து சரோஜா தேவி நீக்கப்பட்டார். படத்தில் ஜீவா பாத்திரத்தை உங்களுக்கு அளித்து, தனக்கு நிகரான முக்கியத்துவத்தை எம்.ஜி.ஆர். உங்களுக்கு ஏற்படுத்தினார்! கே.ஆர். விஜயாவையும் நீக்கிவிட்டு, ராஜயை அந்த வேடத்திற்கு ஒப்பந்தம் செய்தார்.

மந்திரவாதியாக சோ, மங்கம்மாவாக பண்டரிபாய் இவர்களோடு... ஜோதி லட்சுமி, ஆர்.எஸ்.மனோகர், புஷ்பமாலா என்று நடிக, நடிகைகளை ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்தார்.

அப்போதுதான், நீங்கள் ஒரு வேண்டுகோளை எம்.ஜி.ஆரிடம் முன்வைத்தீர்கள்...!

- தொடர்வேன்...

தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x