Published : 26 Nov 2016 10:17 AM
Last Updated : 26 Nov 2016 10:17 AM
சக்கையாகிப் போன
ஒரு பழைய நினைவின்
இடுக்கிலிருந்து
உருண்டோடி வருகிறது
*
காடிருந்த நிலத்தின்
வியர்வையாக வழிகிறது
*
புதையுண்ட
தனிமையின் விதையொன்று
மரமாகி உதிர்க்கும்
முத்து முத்துப் பூக்களாக
உதிர்ந்து கொண்டிருக்கிறது
மூலம் காண முடியாத
ஆழத் துயரில் ஊற்றெடுத்து
தளும்பிக் கொண்டிருக்கிறது
*
கால வெறுமையின்
ஊதுகுழல்களால் ஊதப்படும்
சாம்பல் பூத்த கங்குகள் எரிவதில்
பொங்கிப் பொங்கி வழிகிறது
பசி கொண்ட மலைப்பாம்பாக
காதுமடல்களில் நுழைந்தும்
கழுத்துவரை ஊர்ந்தும்
எதையோ தேடித்தேடி
அலைந்து கொண்டேயிருக்கிறது
என் கண்ணீர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT