Last Updated : 13 Jul, 2015 09:12 AM

 

Published : 13 Jul 2015 09:12 AM
Last Updated : 13 Jul 2015 09:12 AM

இன்று அன்று | 2001 ஜூலை 13: அமெரிக்காவை ஸ்தம்பிக்கவைத்த புழு!

இணையதளம் என்பது மெய்நிகரான வெளியாக இருந்தாலும், யதார்த்த உலகின் போக்கைத் தீர்மானிக்கும் சக்தியாக விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே வருகிறது. நிஜ உலகை சைபர் உலகம் கொண்டு அதிபயங்கரமாக அச்சுறுத்த முடியும் என உலகம் அறிந்துகொண்ட நாள் ஜூலை 13, 2001. வழக்கம்போலத்தான் அன்றும் அமெரிக்காவின் ‘கெமிக்கல் அப்ஸ்டிராக்ட் சர்வீஸ்’ நிறுவனத்தின் மூத்த பாதுகாப்புப் பொறியாளரான கென் எயிக்மான், அலுவலகத்தின் கணினி இணையதளத்தைத் துழாவிக்கொண்டிருந்தார். திடீரென ‘Hello! Welcome to http://www.worm.com! Hacked By Chinese!’ எனும் வரி கணினி திரையில் ஓடியது.

என்னவென்று சுதாரிப்பதற்குள் 27 கணினிகள் வழியாக 611 புரொகிராமர் வெப் சர்வர்களுக்குள் அந்தப் ‘புழு’நுழைந்து அத்தனை கணினிகளையும் தாக்கியது. அடுத்த இரு நாட்களில் 1,000 கணினிகள் முடக்கப்பட்டன. சூழலைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொறுப்பை, ‘இ-ஐ டிஜிட்டல் செக்யூரிட்டி’(eEye Digital Security) நிறுவனத்தின் தலைமை அதிகாரியான மார்க் மைஃபிரட் ஏற்றுக்கொண்டார். அதற்குள் இந்த அதிபயங்கரமான கணினி புழு, மைக்ரோசாப்ட் இணையத் தகவல் மையத்தின் பலவீனமான பகுதிக்குள் ஊடுருவியது. ஆனால், இது எங்கிருந்து ஏவப்பட்டது என்பதைக் கண்டுபிடித்தால் மட்டுமே தாக்குதலை எதிர்கொள்ள முடியும் என்ற நிலை. ஜூலை 17 அன்று மார்க்கின் அதிரடி தொழில்நுட்ப ஆய்வின் மூலம் சீனப் பல்கலைக்கழகம் ஒன்றி லிருந்து இந்தக் கணினிப் புழு ஏவப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. அந்தக் கணத்தில் மார்க் தனக்குப் பிடித்தமான ‘கோட் ரெட் மவுண்டன் டியூ’ குளிர்பானத்தைக் குடித்துக்கொண் டிருந்தார். ஆகவே, இந்த நூதனத் தீவிரவாதக் கணினிப் புழுவுக்கு ‘கோட் ரெட்’ எனப் பெயரிட்டார்.

2000-ம் ஆண்டிலேயே ‘ஐ லவ் யூ’கணினிப் புழு உலகை ஆட்டிவைத்தது. அதற்கும் முன்னரே பலவிதமான கணினி வைரஸ் இணையம் வழியாகக் கணினிகளைப் பிடித்தாட்டி யுள்ளன. வைரஸைப் பொறுத்தவரை எந்த புரொகிராமுக்குள் அது பதிவிறக்கம் ஆகிறதோ அதை மட்டுமே தாக்கும். அதற்கு ஆண்டி வைரஸ் மென்பொருள் எனும் மாற்று மருந்தைத் தந்தால், கணினி காப்பாற்றப்படும். ஆனால், கணினிப் புழுக்கள் அதிபயங்கரமானவை. ஒரு மின்னஞ்சல் மூலமாகப் பிரவேசம் செய்தால் போதும் நேரடியாகக் கணினியின் மையத்தை ஒட்டுமொத்தமாகத் தகர்த்துவிடும்.

இந்தத் தகவல்களை ஆராய்ந்து கண்டுபிடிப்பதற்குள் ‘கோட் ரெட் வார்ம்’ அமெரிக்க அரசினுடைய வெள்ளை மாளிகையின் தாய்க் கணினியைக் குறிவைத்துச் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஜூலை 19-ல் 2,50,000 கணினிகளை கோட் ரெட் காவு கொண்டது. முதல் கட்ட நடவடிக்கையாக இணையத்தின் வேகத்தை முடக்கியது. ஆனால், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் எஃப்.பி.ஐ-யும் இணைந்து, வெள்ளை மாளிகையின் கணினிகளை ‘ரெட் கோட் வார்ம்’ தாக்கும் முயற்சியை முறியடித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x