Published : 24 Dec 2017 05:57 PM
Last Updated : 24 Dec 2017 05:57 PM
இமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதல்வராகிறார் ஜெய்ராம் தாகூர். அவர் பாஜக சட்டப்பேரவைத் தலைவராக இன்று நடைபெற்ற கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தாகூர் டிசம்பர் 27 அன்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்.
மூத்த பாஜக தலைவர் பிரேம் குமார் துமால், முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனால் அவரது சுஜான்பூர் தொகுதியில் தோல்வியைத் தழுவியதால், அடுத்ததாக முன்னாள் முதல்வர் ஷாந்தகுமார் மற்றும் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோரும் முன்மொழியப்பட்டனர்.
பின்னர், துமாலுடன், இந்த பட்டியலுக்கு வெளியே இருந்த மண்டி மாவட்டத்தில் உள்ள செராஜ் சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தாகூர், மத்திய அமைச்சர் நட்டா இருவரும் முன்னணியில் இருந்தனர்.
மத்தியிலிருந்து சிம்லாவுக்கு வந்திருந்த இரண்டு பார்வையாளர்கள்- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் மாநிலத்தில் டிசம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் பாஜகவின் மாநிலத் தலைமைக்குழு, எம்.பி.க்கள் மற்றும் சிலஎம்எல்ஏக்களிடம் பேசி கருத்துக்களை எடுததுக்கொண்டனர்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து நிலவுவது குறித்து சிம்லாவிலிருந்து டெல்லி திரும்பியதும் மத்திய தலைமையிடம் டிசம்பர் 23 அன்று புதிய ஆலோசனைகளை நடத்தினர்.
பின்னர்செய்தியாளர்களைச் சந்தித்த தோமர், ''ஜெய்ராம் தாகூர் இமாச்சலப் பிரதேசத்தின் பாஜக சட்டப்பேரவையின் கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்''என்று கூறினார்.
இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது. இதில், பாஜக 44 இடங்களில் வென்றது. ஆளும் காங்கிரஸ் 21 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியைப் பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT