Published : 26 Apr 2017 03:10 PM
Last Updated : 26 Apr 2017 03:10 PM
வேளான் தொழில் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு வரிவிதிப்பு கிடையாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று டெல்லியில் நடந்த கூட்டத்தின்போது விவசாயம் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் வருமான வரி விதிக்க வேண்டும் என்ற நிதிஅயோக் பரிந்துரைத்தது. இந்நிலையில், வேளான் தொழில் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு வரிவிதிக்கும் எவ்வித திட்டமும் அரசுக்கு இல்லவே இல்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜேட்லி வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை ஒன்றில், "நிதி ஆயோக் பரிந்துரையை நான் முழுமையாக வாசித்தேன். அது தொடர்பாக எழுந்துள்ள குழப்பதை தீர்க்கும் வகையில் நான் ஒரு விவரத்தை கூற விரும்புகிறேன். வேளாண் துறை மூலம் கிடைக்கும் வருவாய்க்கு வரிவிதிக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை,
மேலும், அரசியல்சாசனத்தின்படி வேளாண் வருவாய் மீது வரி விதிக்க மத்திய அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை" எனக் கூறினார்.
முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) நிதி ஆயோக் அதிகாரி ஒருவர், "அனைத்துவகையான வேளாண் வருவாய்க்கும் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் விவசாயிகள் பயனடைய வேண்டும் என்பதே. ஆனால், வேளாண் துறை சாராத சிலரும் இதைப் பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்கின்றனர். இது கறுப்புப் பணத்துக்கு எதிரான போரில் பின்னடைவை ஏற்படுத்தும்" எனக் கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்தே மத்திய அரசு வேளாண் வருவாய்க்கும் வரி விதிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் பரவின. விவசாய வருவாய்க்கு வரிவிதிப்பு கிடையாது என்பதை மத்திய அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT