Published : 22 Jan 2017 12:04 PM
Last Updated : 22 Jan 2017 12:04 PM
அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என பேசிய டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி ஒருங்கிணைப் பாளரான கேஜ்ரிவால், “காங் கிரஸ், பாஜகவினர் வாக்குக்கு பணம் கொடுக்க முன்வருவார்கள். பணவீக்கம் அதிகமாக இருப்பதால் ரூ.5 ஆயிரத்துக்கு பதில் ரூ.10 ஆயிரம் வேண்டும் என கேளுங்கள். ஆனால் வாக்குகளை ஆம் ஆத்மிக்கு போடுங்கள்” என பேசினார்.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் கேஜ்ரிவாலுக்கு விளக்கம் கேட்டு கடந்த 16-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பாக அவர் அளித்த பதிலில், “வாக்காளர்களுக்கு நான் லஞ்சம் தரவுமில்லை, லஞ்சம் வாங்குமாறு ஊக்குவிக்கவும் இல்லை. அதேநேரம் நான் கூறியதில் தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை” என கூறியிருந்தார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் கேஜ்ரிவாலுக்கு அனுப்பி உள்ள உத்தரவில், “2015-ல் நடந்த டெல்லி பேரவைத் தேர்தலின்போது நடத்தை விதிமுறைகளை மீறினீர்கள். அப்போது மீண்டும் இதுபோல பேச மாட்டேன் என கூறியிருந்தீர்கள். ஆனாலும் மீண்டும் விதிமுறைகளை மீறும் வகையில் பேசி உள்ளீர்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வரும் காலங்களில் மீண்டும் இதுபோல் பேசினால் உங்கள் மீதும் கட்சியின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது மற்றும் சின்னத்தை முடக்குவது பற்றியும் பரிசீலிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேஜ்ரிவால் ட்விட்டர் பக்கத்தில், “தேர்தல் ஆணையத்தின் குற்றச்சாட்டு தவறானது. இது தொடர்பான ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்” என பதிவிட்டுள்ளார்.
பாதுகாப்பு தேவையில்லை
பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி வி.கே.சிங்குக்கு எழுதி உள்ள கடிதத்தில், “என்னுடைய பயணத்தின்போது பாதுகாப்புக்காக அதிக அளவில் போலீஸாரை பணியில் ஈடுபடுத்தி உள்ளதாக தெரியவந்தது. எனக்கு இந்த பாதுகாப்பு தேவையில்லை. இதை விலக்கிக் கொள்ளலாம்” என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT