Published : 26 Mar 2017 12:27 PM
Last Updated : 26 Mar 2017 12:27 PM
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வசதியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செயல் தலைவர் பிரவீன் தொகாடியா நேற்று கூறியதாவது:
இமாச்சலபிரதேச மாநிலம் பலம்பூரில் கடந்த 1987-ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக பாஜக தீர்மானம் இயற்றியது. இப்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.
இதுபோல, பாஜக தீர்மானத்தின்படி ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரிய சட்டம் இயற்ற பிரதமர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.
உத்தரபிரதேசத்திலும் பாஜகவைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் தலைமையில் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்துள்ளது. அவரும் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக உரிய நடவடிக்கையை மேற்கொள்வார் என்று நம்புகிறேன்.
ராம நவமியை முன்னிட்டு வரும் 28-ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள 5 ஆயிரம் தாலுகாக்கள் மற்றும் வட்டங்களில் விஎச்பி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
மேலும் ஏப்ரல் 2-ம் தேதி டெல்லியில் விஎச்பி சார்பில் பேரணி நடைபெறும். அப்போது, ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக உறுதிமொழி ஏற்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT