Last Updated : 27 Jan, 2015 08:45 AM

 

Published : 27 Jan 2015 08:45 AM
Last Updated : 27 Jan 2015 08:45 AM

ராஜினாமா விவகாரத்தில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் திடீர் பல்டி அடித்தது ஏன்?- வெளியாகாத பின்னணி தகவல்கள்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வரும் பவானி சிங், கடந்த 23-ம் தேதி ராஜினாமா செய்தார். இந்த செய்தி நேற்று முன் தினம் ‘தி இந்து'வில் வெளியானது. இந்நிலையில், தான் ராஜினாமா செய்யவில்லை என்று திடீரென பல்டி அடித்துள்ளார். இதன் பின்னணியில் என்ன நடந்தது என நீதிமன்ற வட்டாரத்தைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தோம்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை பவானி சிங் தனது ராஜினாமா கடிதத்தை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் ஐஜி குணசீலனி டம் கொடுத்துள்ளார். உடனே சொத்துக் குவிப்பு வழக்கை கவனிப்பதற்காக ஜெயலலிதா நியமித்துள்ள வழக்கறிஞர் செந்திலுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து செந்தில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை யைச் சேர்ந்த குணசீலன், சம்பந்தம் ஆகியோர் பவானி சிங்கை சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கினர்.

ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத் தினர். அவர் தனது முடிவிலிருந்து பின்வாங்க முடியாது என தெரிவித்தார். அப்போது “மேலிடத்தில் பேசி, உங்களுக்கு தேவையானதை ஏற்பாடு செய்கிறோம். வழக்கு நன்றாக போய்க்கொண்டிருக்கும் வேளையில், பிரச்சினை செய்யாதீர்கள்” என செந்தில் கூறியுள்ளார்.

இதையடுத்து பவானி சிங், “திமுக, சுப்பிரமணியன் சுவாமி, டிராபிக் ராமசாமி உள்ளிட்டோரின் நெருக் கடியை சமாளிக்க முடியவில்லை. ச‌மீபகாலமாக எனக்கு உடல்நிலையும் சரியில்லை. இது எல்லாவற்றையும்விட எனக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ.65 ஆயிரம் (ஒரு நாளைக்கு) போதாது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் என்றால் லட்சக் கணக்கில் வழங்குகிறீர்கள். ஒரு சிலருக்கு ரூ.25 லட்சம் வரை வழங்கியதாக கேள்விப்பட்டேன். எனவே, எனக்கும் எனது உதவியாளருக்கும் சேர்த்து ஒருநாளைக்கு ரூ.3 லட்சம் ஊதியமாக தாருங்கள். அதுமட்டுமல்லாமல் பாக்கி தொகையையும் ‘செட்டில்’ செய்யுங்கள். இல்லாவிடில் ராஜினாமா செய்வதைத்தவிர வேறு வழி இல்லை” என கூறியுள்ளார்.

ஒரு நாளைக்கு ரூ 1.8 லட்சம்

இதையடுத்து வழக்கறிஞர் செந்தில், ஐஜி குணசீலன் ஆகியோர் இது தொடர்பாக சென்னையில் இருப்பவர்களிடம் பேசினர். அதன் பிறகு பவானி சிங்கிடம், “இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். நல்ல முடிவை சொல்கிறோம்” எனக் கூறியுள்ளனர். இதையடுத்து குணசீலனிடம் இருந்த ராஜினாமா கடிதத்தை செந்தில் பெற்றுக்கொண்டார்.

கடைசியாக பவானி சிங், “ஒரு நாளைக்கு ரூ.1.8 லட்சம் ஊதியம் வழங்குவதாக இருந்தால் தொடர் கிறேன். இல்லாவிட்டால் ராஜினாமா செய்துவிடுவேன். கூடிய விரைவில் அதற்கான அரசாணையோ அல்லது உறுதியான கடிதமோ தாருங்கள். இல்லாவிடில் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவருடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை பவானி சிங்குக்கு சனிக்கிழமை இரவு தகவல் கொடுத்தது. அதனைத் தொடர்ந்தே அவர் தான் ராஜினாமா செய்யவில்லை என பல்டி அடித்துள்ளார் என்றனர்.

ராஜினாமா நாடகம்

இது தொடர்பாக திமுகவின் வழக்கறிஞர்களோடு பேசிய போது, “பவானி சிங் பணத்துக்காக ராஜினாமா நாடகத்தை போட்டுள்ளார். இப்போது அவருக்கு சேர வேண்டியதை கொண்டுபோய் சேர்த்ததால் ராஜினாமா செய்யவில்லை என்கிறார்.இதுபோல பவானி சிங்கின் பல நாடகங்ளை நிறைய பார்த்துவிட்டோம். தற்போது அவரது ராஜினாமா நாடகம் தொடர்பாக தக்க பாடத்தை அவருக்கு புகட்டுவோம்” என அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x