Published : 27 Aug 2014 08:40 PM
Last Updated : 27 Aug 2014 08:40 PM

முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி இந்தியா திரும்ப அனுமதி

ஐபிஎல் கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் லலித் மோடியின் பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்தது செல்லாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், அவரிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

பதார் துரேஸ் அகமது மற்றும் விபு பாக்ரூ ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு, மோடியின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த உத்தரவை ரத்து செய்துள்ளது. ஆனால் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட விதி மீறலில் லலித் மோடியின் பங்கு குறித்த விவகாரம் பற்றி எந்தவிதக் கருத்தையும் கூறத் தயாராக இல்லை என்று இந்த நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

இந்த முறைகேடுகளைத் தனியாக அதிகாரிகள் விசாரித்து வருவதால், அது பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள், அவர் மீது இருந்து வரும் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைக்கும் அவரது பாஸ்போர்ட்டை முடக்குவதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. வழக்கு விசாரணைக்கும் அதற்கும் தொடர்பில்லை. எனவே, அவரது பாஸ்போர்ட்டை முடக்கியிருப்பது செல்லுபடியாகாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவரது பாஸ்போர்ட் முடக்கப்படுவது அரசியல் சாசனத்தின் கருத்துச் சுதந்திரம் என்ற பிரிவை மீறுவதாகும். அந்நியச் செலாவணி விதி மீறலை அணுக தனியான நடைமுறைகள் உள்ளது. அந்தச் சட்டப்பிரிவினர் விடுத்த அழைப்பாணைக்கு ஒருவர் ஒத்துழைக்காததற்கு அவரது பாஸ்போர்ட்டை முடக்குவது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்தத் தீர்ப்பினால் லலித் மோடி இந்தியாவுக்கு மீண்டும் திரும்பலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x