Published : 01 Mar 2015 11:45 AM
Last Updated : 01 Mar 2015 11:45 AM

மத்திய பட்ஜெட் 2015-16: சிறப்பு அம்சங்கள்

2015-16-ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதத்தை எட்ட இலக்கு.

* தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பான ரூ.2.5 லட்சத்தில் மாற்றம் இல்லை. எனினும் ஆண்டு வருமானம் ரூ.4,44,200 வரை உள்ளவர்களுக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

* தமிழகம், இமாச்சல பிரதேசம், அசாம், பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும்.

* தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்து பணம் பெறும் புதிய திட்டம் தொடக்கம்.

* நகர்ப் பகுதிகளில் 2 கோடி வீடுகள், கிராமப் பகுதிகளில் 4 கோடி வீடுகள் கட்டப்படும்.

* பிரதான் மந்திரி கிராம சின்சாய் யோஜனா திட்டத்தில் சொட்டு நீர் பாசனத்துக்கு ரூ.5300 கோடி ஒதுக்கீடு.

* நபார்டு வங்கிக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கீடு.

* ரூ.8.5 லட்சம் கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு.

* விவசாயிகளின் நலனுக்காக தேசிய வேளாண் சந்தை உருவாக்கப்படும்.

* ராணுவத்துக்கு ரூ.2,46,727 கோடி ஒதுக்கீடு.

* கல்விக்கு ரூ.68,968 கோடி ஒதுக்கீடு.

* சுகாதாரத் துறைக்கு ரூ.33,152 கோடி ஒதுக்கீடு.

* மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.10,351 கோடி ஒதுக்கீடு.

* கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு.

* நிர்பயா நிதிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

* சிறுதொழில் கடன் வழங்க முத்ரா வங்கி சேவை தொடக்கம். இந்த வங்கிக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜ்னா திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.12 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு திட்டம்.

* பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜ்னா திட்டத்தில் ரூ.330 ஆண்டு பிரீமியத்தில் ரூ.2 லட்சம் காப்பீடு திட்டம்.

* வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் முதியோர்களுக்காக வாழ்வியல் உபகரணங்கள் வழங்கும் புதிய திட்டம் தொடக்கம்.

* பி.பி.எப். திட்டத்தில் ரூ.3000 கோடி, இ.பி.எப். திட்டத்தில் ரூ.6000 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது. இந்த நிதியில் முதியோருக்காக ‘அடல் ஓய்வூதியத் திட்டம்’ உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

* ரூ.20,000 கோடியில் தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதி அமைப்பு உருவாக்கப்படும்.

* அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க ரூ.150 கோடியில் ‘அடல் புதுமை திட்டம்‘ செயல்படுத்தப்படும்.

* துறைமுக திட்டங்களில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும்.

* ஒரு லட்சம் கோடியில் தலா 4000 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து மின் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

* இந்தியாவுக்கு வந்தபின் விசா பெறும் திட்டம் 150 நாடுகளுக்கு விரிவாக்கம்.

* மரபுசாரா மின் உற்பத்தி 2022-ம் ஆண்டில் 175000 மெகாவாட் எட்ட இலக்கு.

* தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக தீன் தயாள் உபாத்யாயா கிராம கவுசல் யோஜ்னா திட்டம் செயல்படுத்தப்படும்.

* தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக தீன் தயாள் உபாத்யாயா கிராம கவுசல் யோஜ்னா திட்டம் செயல்படுத்தப்படும்.

* கல்வி உதவித் தொகை, கல்வி கடன் திட்டங்களை நிர்வகிக்க பிரதான் மந்திரி வித்யா லட்சுமி கார்யக்ரம் ஆணையம் உருவாக்கப்படும்.

* கர்நாடகாவில் ஐ.ஐ.டி., ஆந்திரா, காஷ்மீரில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள், கேரளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பல்கலைக்கழகம் தொடக்கம்.

* அடுத்த ஆண்டு முதல் ஜி.எஸ்.டி. சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை.

* நிறுவனங்களின் வரி 4 ஆண்டுகளில் 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்படும்.

* வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க புதிய சட்டம். அதன்படி வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்குவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

* வெளிநாட்டுச் சொத்துகளுக்கான வருமான வரியை தாக்கல் செய்யாதவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

* உள்நாட்டில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்த ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைக்கு பான் எண் கட்டாயம். மேலும் பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்ட மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும்.

* செல்வ வரிக்கு பதிலாக 'சூப்பர்-ரிச் வரி' அமல்படுத்தப்படுகிறது. அதன்படி ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் இந்த வரியை செலுத்த வேண்டியிருக்கும்.

* தூய்மை இந்தியா திட்டத்தில் நாடு முழுவதும் 6 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்.

* மகளிர், குழந்தைகள் நல மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு

* 2020-ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும்.

* ஒவ்வொரு நகரம், கிராமத்திலும் மருத்துவ சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஐந்து கி.மீட்டர் தொலைவுக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி அமைக்கப்படும்.

* அனைத்து கிராமங்களிலும் தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தப்படும்.

* மேக் இன் இந்தியா, இளைஞர் திறன் மேம்பாட்டு திட்டங்களின் மூலம் உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உருவாக்கப்படும்.

* வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க புதிய சட்டம்

அசோக சக்கரத்துடன் இந்திய அரசின் தங்க நாணயம்

அசோக சக்கர முத்திரையுடன் மத்திய சார்பில் தங்க நாணயம் வெளியிடப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

“அரசிடம் உள்ள தங்கத்தை நாட்டுக்குள்ளேயே மறுசுழற்சி செய்யும் வகையில் அசோக சக்கர முத்திரையுடன் அரசே தங்க நாணயங்களை வடிவமைத்து வெளியிடும்.

இந்தியாவில் தங்க நுகர்வு அதிகம் உள்ளது நமக்கு தெரிந்ததுதான். ஆனால் இந்தியாவில் விற்கப்படும் தங்க நாணயங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவையாக உள்ளன. இதற்காக நாம் வெளிநாடுகளிடம் பணம் கொடுத்து தங்கம் வாங்க வேண்டியுள்ளது. அரசே தங்க நாணயத்தை வெளியிடுவதால் அந்நிய செலாவணி பெருமளவில் மிச்சமாகும்” என்றார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 800 முதல் 1000 டன் வரை தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.

சிபிஐ-க்கான நிதி ஒதுக்கீடு 10% அதிகரிப்பு

மத்திய பட்ஜெட்டில் சிபிஐ-க்கான நிதி ஒதுக்கீடு சுமார் 10 சதவீதம் அதிகரிக்கப் பட்டுள்ளது.

நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு 2014-15ம் நிதியாண்டில் ரூ. 513.07 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் வரும் நிதியாண்டில் 565.39 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட் ஒதுக் கீட்டை காட்டிலும் சுமார் 10 சதவீதம் கூடுதல் ஆகும்.

கடும் குற்ற வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. நிர்வாக செலவுக்காக இதற்கு பட்ஜெட் டில் நிதி ஒதுக்கப்படுகிறது. சிபிஐயில் மின் ஆளுமை, பயிற்சி மையங்களை நவீனப்படுத்துவது, தொழில்நுட்பம் மற்றும் தடய அறிவியல் மையங்கள் ஏற்படுத்துவது, அலுவலகம், ஊழியர் குடியிருப்புகள் கட்டுவது போன்ற இதர தேவைகளுக்கும் இந்த நிதி பயன் படுத்தப்படும்.

லோக்பால், சிவிசி-க்கு அதிக ஒதுக்கீடு

ஊழலுக்கு எதிரான அமைப்பான லோக்பால் அமைப்புக்கு பட்ஜெட்டில் ரூ.7.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய பணியாளர் நலத்துறையின் கோரிக்கையை ஏற்று லோக்பால் அமைப் பின் நிர்வாக செலவு மற்றும் கட்டுமானப் பணிகள் தொடர்பான செலவுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட் ஒதுக்கீட்டை காட்டிலும் இது 3 மடங்கு அதிகம் ஆகும்.

இதுபோல் ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு (சிவிசி) பட்ஜெட்டில் ரூ.27.68 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டை காட்டிலும் சுமார் ரூ.7 கோடி அதிகம் ஆகும். சிவிசிக் கான ஒதுக்கீட்டில் ரூ. 25.68 கோடி நிர்வாக செலவுக்கும் ரூ.2 கோடி விரிவாக்கப் பணிகளுக்கும் பயன்படுத்தப் படும். ‘லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் 2013’க்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ஒப்புதல் அளித்தார். லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

எஸ்ஐடி-க்கு 10% உயர்வு

கருப்புப் பணத்தை மீட்பது தொடர் பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய் வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) பட்ஜெட்டில் அருண் ஜேட்லி ரூ.45.39 கோடி ஒதுக்கியுள்ளார். கடந்த நிதியாண்டில் இதற்கு ரூ.41.34 கோடி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 10% அதிகரிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் எஸ்ஐடி செயல் படுகிறது. முன்னாள் நீதிபதி அரிஜித் பசாயத் துணைத் தலைவராக உள்ளார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 11 பேர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.

சிமென்ட் மீதான உற்பத்தி வரி டன்னுக்கு ரூ.100 உயர்வு

சிமென்ட் மீதான உற்பத்தி வரி டன்னுக்கு ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பட்ஜெட்டில் ஜேட்லி கூறியது: சிமென்ட் மீதான உற்பத்தி வரி டன்னுக்கு ரூ.900 ஆக இருப்பது டன்னுக்கு ரூ.1000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார். இது சிமென்ட் மீதான அதிகபட்ச உற்பத்தி வரி. அரசு விதிக்கும் ஒவ்வொரு கூடுதல் வரியும் சிமென்ட் விலையை உயர்த்தும் என்ற உள்நாட்டு சிமென்ட் உற்பத்தியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சிமென்ட் விலை அதிகரிக்க இருக்கிறது.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.5000 கோடி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது 2005-ம் ஆண்டில் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அமல் செய்யப்பட்டது. ‘நூறு நாள் வேலை’ என்றழைக்கப்படும் இத்திட்டத்தை தற்போதைய பாஜக அரசு நீர்த்துப் போக செய்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இதுதொடர்பாக மக்களவையில் நேற்றுமுன்தினம் விளக்கமளித்த பிரதமர் நரேந்திர மோடி, ஊரக வேலை வாய்ப்பு திட்டம் நிறுத்தப்படாது என்று உறுதியளித்தார். இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

விவசாய பணிகளை இணைக்க வேண்டும்

ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்து இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ்.கணபதி கூறியதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் அமலில் இருப்பதால் விவசாயத் தொழிலாளிகள் கிடைப்பதில்லை. இதனால் உரிய பருவக் காலத்தில் அறுவடை செய்வது கடினமாக உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆக்கப்பூர்வமான பணிகள் நடைபெறுவதில்லை. இப்போதுள்ள பணிகளுக்கு பதிலாக கிணறு வெட்டுவது, புன்செய் நிலங்களில் நீர் சேமிப்பு உள்ளிட்ட விவசாயப் பணிகளை இத்திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும் என்று கேட்கிறோம்.

அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க ‘அடல் புதுமை திட்டம்’

நாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க ‘அடல் புதுமை திட்டத்தை’ மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

நிதி ஆயோக் அமைப்பின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அமிர்தசரஸில் தோட்டக்கலை கல்வி நிறுவனம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கரில் மருந்தியல் கல்வி நிறுவனங்கள், நாகாலாந்து, ஒடிஸாவில் அறிவியல் ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும் என்றும் ஜேட்லி தெரிவித்தார். கடந்த வாரம் நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் ஒய்.எஸ். சவுத்ரி, நாட்டின் 6 பிராந்தியங்களில் தலா ஓர் அறிவியல் நகரம் உருவாக்கப்படும் என்று அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

நேரடி வரி வசூல் எதிர்பார்ப்பு ரூ.14.49 லட்சம் கோடி

2015-16-ம் நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ.14.49 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 2015-16-ம் நிதியாண்டின் செலவு ரூ.17.77 லட்சம் கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியது: இந்த நிதியாண்டில் திட்டம் சார்ந்த செலவு ரூ.13.12 லட்சம் கோடி, திட்டம் சாராத செலவு ரூ.4.65 லட்சம் கோடி. நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அடுத்த 4 ஆண்டுகளில் படிப்படியாக குறைக்கப்படும். அதிக அளவில் நிறுவனங்கள் வரி இருப்பது வருவாய், முதலீடு என இரு பிரிவையும் பாதிக்கிறது என்று கூறினார்.

மின்சார வாகன தயாரிப்பை அதிகரிக்க ரூ.75 கோடி

பட்ஜெட் உரையில் அருண் ஜேட்லி கூறியது: நாட்டில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களில் உற்பத்தியை அதிகரிக்கவும், அதனை பலரும் வாங்கிப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக 2015-16-ம் நிதியாண்டில் ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனத்தில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட உதிரி பாகங்களுக்கான 6 சதவீத உற்பத்தி வரி சலுகை அடுத்து ஆண்டுக்கும் நீட்டிக்கப்படுகிறது என்றார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இதுபோன்ற வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அரசின் உதவி மிகவும் அவசியம். மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேப்பாட்டுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.13 ஆயிரம் கோடி முதல் ரூ.14 ஆயிரம் கோடி வரை ஒதுக்க வேண்டும் என்று அத்தொழில் துறையினரின் கருத்தாக உள்ளது.

கல்விக்கு ரூ.68,968 கோடி, கிராம மேம்பாட்டுக்கு ரூ.79,526 கோடி

மத்திய பட்ஜெட்டில் கல்விக்கு ரூ.68,968 கோடி, கிராமப்புற மேம்பாட்டுக்கு ரூ.79,526 கோடி, நிர்பயா நிதிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:

மதிய உணவு திட்டம் உட்பட கல்வித் துறைக்கு ரூ.68,968 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல சுகாதாரத் துறைக்கு ரூ.33,152 கோடி, கிராமப்புற மேம்பாட்டுக்கு ரூ.79,526 கோடி, நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.22,407 கோடி, மகளிர்-குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.10,351 கோடி, நீர்வள மேம்பாட்டுக்கு ரூ.4173 கோடி, நிர்பயா நிதிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆப்டிக்கல் பைபர் நெட்வொர்க் திட்டத்தில் 2.5 லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதி அளிக்க 7.5 லட்சம் கி.மீட்டர் தொலைவுக்கு ஆப்டிக்கல் பைபர் பதிக்கப்பட உள்ளது.

ரூ.1 லட்சம் கோடியில் 5 மெகா மின் உற்பத்தி நிலையங்கள்

நாடு முழுவதும் மேலும் 5 மெகா மின் உற்பத்தி நிலையங்கள் ரூ.1 லட்சம் கோடி முதலீட்டில் நிறுவப்படும் என்று அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை ‘பிளக் அன்ட் பிளே’ முறையில் செயல்படுத்தப்படும்.

நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு செயல்பட உள்ள இந்த அனல் மின் நிலையங்கள் 4,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டதாக இருக்கும்.

கடுமையான மின் பற்றாக்குறையை எதிர்கொண்டுவரும் பிஹாரில் ஒரு மின் உற்பத்தி நிலையம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 4 மெகா மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய பிரதேசம், ஆந்திரா, ஜார்க்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 2-வது பிரிவு 2015-16 நிதியாண்டில் செயல்படத் தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x