Last Updated : 16 Sep, 2014 09:14 AM

 

Published : 16 Sep 2014 09:14 AM
Last Updated : 16 Sep 2014 09:14 AM

மங்கள்யான் செயற்கைகோள் மூலம் செவ்வாயை அடையும் முதல் ஆசிய நாடு இந்தியா: இஸ்ரோ அறிவியல் செயலாளர் பேட்டி

செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையை மங்கள்யான் செயற்கைகோள் இந்தியாவுக்கு பெற்றுத்தரும் வாய்ப்புள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) அறிவியல் செயலாளர் வி.கோட்டீஸ்வர ராவ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பெங்களூரில் நேற்று கூறும்போது, "மங்கள்யான் செயற்கைகோளை செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் பணி வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ளது. இப்பணி வெற்றி பெறுமானால், செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையும், முதல் முயற்சியில் செவ்வாயை அடைந்த நாடு என்ற பெருமையும் நமக்கு கிடைக்கும்” என்றார்.

அவர் மேலும் கூறும்போது, “செவ்வாய்க்கு செயற்கை கோள் அனுப்பும் பணி பலமுறை தோல்வி அடைந்துள்ளதை நாம் அறிவோம். விண்ணில் ஏவும்போது அல்லது செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும்போது என பல்வேறு கட்டங்களில் இப்பணி தோல்வி அடைந்துள்ளது. நாம் அனுப்பிய மங்கள்யான் செயற்கைகோள் 98 சதவீத பயணத்தை பூர்த்தி செய்துள்ளது. அதை செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் பணி மட்டுமே எஞ்சியுள்ளது” என்றார்.

இப்பணியில் அமெரிக்காவின் நாசாவுடன் இஸ்ரோ இணைந்து பணியாற்றுமா என்ற கேள்விக்கு, “இதுவரை அப்படியொரு திட்ட மில்லை. வரும் நாட்களில் இருதரப் பினருக்கும் இத்தகைய எண்ணம் ஏற்பட்டால் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது" என்றார்.

மங்கள்யாள் செயற்கைகோளை செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துவதற்காக பூர்வாங்கப் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x