Published : 21 Dec 2014 10:04 AM
Last Updated : 21 Dec 2014 10:04 AM
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட இருந்த ரூ.36.41 கோடி மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து பெங்களூரு மாநகர காவல் இணை ஆணையர் அலோக் குமார் சனிக்கிழமை கூறியதாவது:
பெங்களூரு, கெங்கேரி பகுதியில் செம்மர கடத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்குள்ள 5 நட்சத்திர விடுதியில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு சென்னையை சேர்ந்த சையத் முபாரக் என்பவருக்கு தும்கூருவை சேர்ந்த அப்துல் ரஹ்மான் (49), 3110 கிலோ செம்மரங்களை விற்க முயற்சித்தார். அவர்களைப் பிடித்து விசாரித்தோம்.
ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் வெட்டப்பட்ட செம்மரங்களை பெங்களூரு கொண்டுவந்து சென்னை, மும்பைக்கு கடத்துவதாக கூறினர். அங்கிருந்து கப்பல் மூலமாக சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செம்மரங்கள் செல்வதாகக் கூறினர்.
ஆந்திர மலைப்பகுதிகளில் 1 கிலோ செம்மரம் ரூ.2000க்கு விற்கப்படுகிறது. அங்கிருந்து பெங்களூரு கொண்டுவந்து அதை ரூ.8000-க்கு விற்கின்றனர். பின்னர் இவை சர்வதேச வியாபாரிகளிடம் ரூ.30 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.
ரூ.36.41 கோடி மதிப்பு
சென்னை வியாபாரியிடம் விசாரித்தபோது ஹெப்பக்குடி பகுதியிலும் செம்மர கடத்தல் நடைபெறுவதாக தெரிவித்தார். போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் அங்கு காபி ஷாப்பில் இருந்த, போல் சிங் (42), ஷேக் சையத் (37) ஆகிய இருவர் சிக்கினர். மேலும் 5,315 கிலோ செம்மரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இரு குழுக்களிடமும் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒட்டுமொத்த செம்மரங்களின் மதிப்பு ரூ.36.41 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை 6 பேரை கைது செய்திருக்கிறோம். அவர்களிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது.
இவ்வாறு காவல் இணை ஆணையர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT