Last Updated : 24 Oct, 2014 09:10 AM

 

Published : 24 Oct 2014 09:10 AM
Last Updated : 24 Oct 2014 09:10 AM

பெங்களூரில் கோயிலுக்குள் நுழைந்த தலித் சிறுவர்களை அடித்து உதைத்த பூசாரி: காவல் நிலையத்தில் கட்டப் பஞ்சாயத்து

பெங்களூரில் கோயிலுக்குள் நுழைந்த தலித் சிறுவர்களை அங்கிருந்த பூசாரி அடித்து உதைத் துள்ளார். ஒரு சிறுவனை தடியால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட வர்கள் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க‌ சென்றபோது போலீ ஸார் துணையுடன் ஆதிக்க சாதியினர் கட்டப்பஞ்சாயத்து செய் துள்ளனர்.

பெங்களூரை அடுத்து நெலமங்களாவில் உள்ள ஜெயநகரை சேர்ந்தவர் ராஜ்குமார். செருப்பு தைக்கும் தொழிலாளியான இவருடைய மகன் சந்தோஷ் (8). அங்குள்ள அரசுப் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறான். கடந்த 19-ம் தேதி ருத்ரேஸ்வரா கோயில் பூசாரியால் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சிறுவன் சந்தோஷை 'தி இந்து'சார்பாக சந்தித்துப் பேசிய போது அவன் கூறியதாவது:

நானும் எனது நண்பர்களும் கிரிக்கெட் விளையாடிவிட்டு அருகில் உள்ள ருத்ரேஸ்வரா கோயில் வளாகத்துக்கு தண்ணீர் குடிக்க‌ சென்றோம். அப்போது கோயிலில் பிரசாதம் வழங்கி கொண் டிருந்தார்கள். நாங்கள் பிரசாதம் கேட்டபோது, பூசாரி விஜயகுமார் என்னையும் எனது நண்பர்கள் சேத்தன், கவுதமையும் தடியால் அடித்தார். நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர். நான் அவரிடம் மாட்டிக்கொண்டேன்.

என்னை வெயிலில் முழங்கால் போட வைத்து தலையில் அடித்தார். அதனால் எனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வந்ததால் விட்டுவிட்டார். இனிமேல் கோயிலுக்குள் நுழையக்கூடாது என திட்டி அனுப்பினார்'' என்றான் சந்தோஷ்.

கட்டப் பஞ்சாயத்து

இது குறித்து சந்தோஷின் தாய் முனிரத்னம்மா கடந்த திங்கள் கிழமை நெலமங்களா காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றார். அங்கு வந்த கோயில் நிர்வாகிகள் சிலர்,'' உன்னுடைய மகன் கோயிலில் திருட வந்தான். அதனை பூசாரி தடுக்க முற்பட்டபோது, அவனே தூணில் இடித்துக்கொண்டு மண்டை உடைந்துவிட்டது. அதுபற்றி நாங்கள் புகார் கொடுத்தால் உங்கள் குடும்பத்தையே சிறையில் போட்டுவிடுவார்கள். நாங்கள் புகார் அளிக்காமல் இருக்க வேண்டும் என்றால் பேப்பரில் கையெழுத்து போட வேண்டும்''என மிரட்டியுள்ளனர். போலீஸார் சிலரும், ‘‘சந்தோஷின் சிகிச்சைக் காக ரூ.2 ஆயிரம் வாங்கி தருகி றோம்''எனக் கூறி வெற்று பேப்பரில் முனிரத்னம்மாவிடம் கைநாட்டு வாங்கியுள்ளனர்.

ஊடகங்கள் கேள்வி

இந்தச் சம்பவம் தொடர்பாக பெங்களூர் மாநகர காவல் ஆணை யர் எம்.என்.ரெட்டியிடம் நிருபர் கள் கேள்வி எழுப்பினர். அவரது நடவடிக்கையால் பூசாரி விஜய குமார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது தலைமறை வாகிவிட்ட அவரை கைது செய்ய நெலமங்களா போலீஸார் தேடி வருகின்றனர். தலித் குடும்பங்க ளுக்கு ஆதிக்க சாதியினரால் அச்சுறுத்தல் இருப்பதால் ஜெயநகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x