Last Updated : 19 Dec, 2014 07:46 PM

 

Published : 19 Dec 2014 07:46 PM
Last Updated : 19 Dec 2014 07:46 PM

பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகம் ரூ.261.64 கோடி சேவை வரி ஏய்ப்பு: மத்திய அமைச்சர் தகவல்

பிசிசிஐ/ஐபிஎல் நிர்வாகம் ரூ.261.64 கோடி சேவை வரி ஏய்ப்பு செய்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி இணை அமைச்சர் ஜயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இது தவிரவும், 2,148.3 கோடி தொகைக்கு அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்திற்கு புறம்பாக பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது தொடர்பாக பிசிசிஐ, லலித் மோடி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

எழுத்து பூர்வமாக பதில் அளித்த மத்திய நிதி இணை அமைச்சர் சின்ஹா விளக்கம் கேட்டு 4 நோட்டீஸ்கள் அனுப்பப் பட்டதோடு ரூ.98.35 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிசிசிஐ/ஐபிஎல் அமைப்பு வரி ஏய்ப்பு செய்திருப்பது மற்றும் அன்னிய செலாவணிக்கு புறம்பான பரிவர்த்தனைகள் மேற்கொண்டது பற்றிய கேள்விக்கு “ஆம்” என்று சின்ஹா பதில் அளித்தார்.

மேலும், அன்னியச் செலாவணி சட்டத்தை மீறி அயல்நாட்டு வீரர்களை ஏலம் எடுப்பது தொடர்பாக 18.6 மில்லியன் டாலர்கள் தொகைக்கு கூடுதலாக உத்தரவாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பாக விசாரணை முன்னேறிய நிலையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், 2009ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற போது, ஆப்பிரிக்க நாட்டில் அயல்நாட்டு பணப் பரிவர்தனை கணக்கை மத்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் தொடங்கி அதில் 49.86 மில்லியன் டாலர்கள் தொகையை செலுத்தியது தொடர்பாகவும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

அன்னியச் செலாவணி விதி மீறல்கள் தொடர்பாக ரூ.2,042.45 கோடிக்கான தொகை குறித்து விளக்கம் கேட்டு 19 நோட்டீஸ்கள் பல்வேறு தரப்பினருக்கு அனுப்பப் பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x