Last Updated : 01 Oct, 2014 07:49 AM

 

Published : 01 Oct 2014 07:49 AM
Last Updated : 01 Oct 2014 07:49 AM

பவானி சிங்குக்கு அரசாணை நகல் வழங்கப்படாதது யாருடைய தவறு?- தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் என்ன செய்தார்கள்?

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கிலும் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்து கர்நாடக அரசு நேற்று காலை 11.30 மணிக்கு அரசாணை வெளியிட்டது.

ஆனால் இந்த அரசாணை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்குதான் அவருக்கு முறையாக வழங்கப்பட்டது.எனவே அவர் காலையில் நடந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் வாதிட மறுத்து விட்டார்

காலையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை பவானி சிங்குக்கு கிடைக்காமல் போனதற்கு யார் காரணம் என நீதிமன்ற வட்டாரத்தில் விசாரித்தோம்.

கர்நாடக அரசின் ஆணையை உயர்நீதிமன்ற பதிவாளர் ஆர்.கே.தேசாய் பவானிசிங்கிடம் உடனடியாக வழங்கி இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த வழக்கை நடத்தும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அரசாணையை பெற்று அவரிடம் வழங்கி இருக்க வேண்டும்.

பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற பதிவாளராவது பவானி சிங்கிடம் அரசாணையை ஒப் படைத்து இருக்க வேண்டும். அரசாணை பவானி சிங்குக்கு வழங்கப்பட்டதா என ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களும் கண்காணித்திருக்க வேண்டும். இதில் கர்நாடக அரசு எந்த தவறும் செய்யவில்லை.

தசரா திருவிழா காலகட்டத் திலும் உடனடியாக அரசு வழக்கறிஞரை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஒருவேளை பவானிசிங்குக்கு முறையாக அரசாணை வழங் கப்பட்டு இருந்தால் ஜெயலலிதா வின் ஜாமீன் மனு ஒருநாள் தள்ளிப்போய் இருக்காது.

லண்டனில் இருந்து வர வழைக்கப்பட்ட மூத்த வழக் கறிஞர் ராம்ஜெத்மலானியின் வருகையும் வீணாகி இருக்காது. நீதிமன்ற பதிவாளரும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரும் அலட்சியமாக இருந்திருந்தாலும் ஜெயலலிதா தரப்பு விழிப்புடன் இருந்திருக்க வேண்டும்'' என்றார்கள்.

இது தொடர்பாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களிடம் கேட்டபோது, கடந்த திங்கள் கிழமை இரவு 8.30 மணிக்கு பெங்களூரில் உள்ள ஒயிட் பீல்ட் பகுதியில் உள்ள பவானி சிங் வீட்டை தேடி சென்றோம்.

அவருடைய வீட்டில் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸாரை சந்தித்து பவானி சிங்கை சந்திக்க அனுமதி கேட்டோம். அவர் வீட்டுக்குள் இருந்துகொண்டே ஊருக்கு போய் இருப்பதாக சொல்லி விட்டார்'' என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

இன்றும் எதிர்ப்பேன்-பவானி சிங்

இதனிடையே செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பவானி சிங்குக்கு கர்நாடக அரசின் அரசாணை வழங்கப்பட்டது. இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் ஜாமீன் மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராகிறார். ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை கண்டிப்பாக எதிர்ப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்ற நீதிபதி டி'குன்ஹா வழங்கிய தீர்ப்பாணையின் நகல் இன்னும் பவானி சிங்குக்கு வழங்கப்படவில்லை. ஆதலால் இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போது, தான் இன்னும் 1200 பக்க தீர்ப்பாணையை படிக்கவில்லை.

அதனால் பதில் மனு தாக்கல் செய்ய 3 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க பவானி சிங் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x