Published : 25 Jul 2016 05:20 PM
Last Updated : 25 Jul 2016 05:20 PM
பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட மும்பை பெண் ஒருவரின் வளர்ச்சி குன்றிய 24 வார கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதாவது மருத்துவ அறிக்கையில் கருவளர்ச்சிக் குறைபாடு பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தால், இதனால் தாயார் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் 24 வார கருவைக் கலைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமண வாக்குறுதி அளித்து பலாத்காரம் செய்துள்ளார் ஒரு நபர். இந்தப் பெண் கருவுற்ற நிலையில் அதனைக் கலைக்க 24 வாரங்களுக்குப் பிறகு முயற்சி செய்த போது கருக்கலைப்பு குறித்த சட்டம் அதற்கு இடையூறாக இருந்தது.
அதாவது 20 வாரங்களுக்கு மேலான கருவை கலைக்கக் கூடாது என்று 1971-ம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையின் மீதான தீர்ப்பை இன்று ஜே.எஸ்.கேஹர், அருண் மிஸ்ரா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கியது.
கிங் எட்வர்ட் நினைவு மருத்துவக் கல்லூரி மற்றும் மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றின் 7 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவின் அறிக்கையை உச்ச நீதிமன்றம் தீவிரமாகப் பரிசீலித்தது. அந்த அறிக்கையில் கருவில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோளாறுகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டது.
இந்நிலையில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி, தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமேயானால் 24 வார கருவைக் கலைக்க மருத்துவக் கருக்கலைப்புச் சட்டத்தில் இடமிருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், “மனுதாரர் விருப்பப் பட்டால் கருவை கலைத்துக் கொள்ளலாம். அவருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.” என்று தெரிவித்தனர்.
கடந்த ஜூலை 22-ம் தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவிடம் இந்தப் பெண்ணின் வயிற்றில் வளரும் கருவைப்பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோரியிருந்தனர். இந்த அடிப்படையில் தற்போது அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கியின் ஆலோசனையையும் கேட்டு, மருத்துவ நிபுணர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளையும் பரிசீலித்து கருவைக் கலைக்க அனுமதி வழங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT