Last Updated : 27 Jan, 2015 09:39 PM

 

Published : 27 Jan 2015 09:39 PM
Last Updated : 27 Jan 2015 09:39 PM

ஜெயலலிதா தரப்பு இறுதி வாதம் நிறைவடைந்தது - திமுக, சுப்பிரமணியன் சாமி மனுக்கள் மீது இன்று விசாரணை

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அவரது தரப்பு இறுதிவாதம் நேற்றுடன் நிறை வடைந்தது. இதையடுத்து சசிகலா தரப்பின் இறுதி வாதம் இன்று தொடங்குகிறது.

இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களை மூன்றாம் தரப்பாக சேர்க்கக்கோரிய திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், சுப்பிர மணியன் சுவாமி ஆகியோரின் மனுவையும் இன்று விசாரிப்பதாக நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தெரிவித் துள்ளார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார், அசோகன், மணிசங்கர் உள்ளிட்டோர் ஆஜராயினர். முன்னதாக, கடந்த 8 வேலை நாட்களாக நாகேஸ்வரராவ் ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி வாதிட்டிருந்தார்.

நேற்று ஜெயலலிதா தரப்பு வழக் கறிஞர் பி.குமார் வாதிட்டதாவது:

வழக்கு காலத்துக்கு முன்பும் பின்புமான ஜெயலலிதாவின் சொத்து, வருமானம்,செலவு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை தாக்கல் செய்துள்ளோம். அதில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கூறியுள்ள ரூ.66.65 கோடியை விட அதிகமாக‌ ஜெயலலிதாவிடம் ரூ.97 லட்சம் அதிகமாக இருந்தது என கூறியுள்ளோம்.

ஜெ.தரப்புக்கு நீதிபதி கேள்வி

1991-96 காலகட்டத்தில் ஜெய லலிதாவிடம் இருந்த அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக் களுக்கு உரிய முறையில் வருமான வரி செலுத்தியுள்ளோம். இதனை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்த போது, ‘ஜெயலலிதா சட்ட விரோதமாக சொத்து சேர்க்கவில்லை' என தீர்ப்பு அளித்துள்ளது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘மேல்முறையீட்டு விசாரணை தொடங்கிய நாளில் இருந்து வருமான வரித்துறை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய தரப்பில் சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து இன்னும் 20 சதவீதம் கூட வாதம் முன்வைக்கப்ப‌டவில்லை. வருமான வரியை பற்றி மட்டும் பேசுகிறீர்கள். நான் என்ன ஆடிட்டரா? வழக்கு காலத்தில் ஜெயலலிதாவுக்கு எவ்வளவு வருமானம், எவ்வளவு சொத்துகள் இருந்தது, அது எப்படி வாங்கப்பட்டது என்பதை கூறுங்கள். நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீர்கள். இது தொடர்பாக 65 ஆயிரம் பக்க ஆவணங்கள் இருக்கிறது.அதனை படித்து கொண்டே இருந்தால் எப்படி?'' என கேள்வியெழுப்பினார்.

தனியார் நிறுவனங்களின் வழக்கு

இதனைத் தொடர்ந்து பி.குமார், ‘‘சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள 6 தனியார் நிறுவனங்கள் 1986-ல் தொடங்கப்பட்டவை.இந்த நிறு வனங்கள் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பங்குதாரர்களாக மட்டுமே இருந் தார்கள். வழக்கு காலத்தில் சசிகலா, சுதாகரன் அந்த தனியார் நிறுவனங்களில் நிர்வாக இயக்குநர் களாக இருந்தனர்.

இதில் ஜெயலலிதா நேரடி யாகவோ, மறைமுகமாகவோ எந்த பொறுப்பையும் வகிக்கவில்லை. ஆனால் அந்த நிறுவனங்களின் சொத்துக்களை ஜெயலலிதாவின் சொத்துக்கள் என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சேர்த்துள்ளனர். ஆனால் குற்றப் பத்திரிக்கையில் இது குறித்து தெரிவிக்கவில்லை''என்றார்.

அதற்கு நீதிபதி,''இது குறித்து நீங்கள் விசாரணை நீதிமன்றத்தில் முறையிட்டீர்களா?'' என வினவினார்.அதற்கு பி.குமார் மௌனம் காத்ததால், திமுக வழக்கறிஞர் குமரேசன், ‘‘தனியார் நிறுவனங்களின் சொத்துகள் தொடர்பாக சென்னை நீதிமன்றத்திலும் பெங்களூரு நீதிமன்றத்திலும் முறையிட்டார்கள். அதனை நீதிமன்றம் ஏற்கவில்லை'' என பதில் அளித்தார்.

அரசியல் பகைமை

இதனை தொடர்ந்து பி.குமார், ‘‘இவ்வழக்கு ஜெயலலிதா மீது சட்டத்துக்கு புறம்பாக அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக தொடுக்கப் பட்டுள்ளது. அரசியல் ரீதியாக பழி வாங்குவதற்காகவே சொத்துகள் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளன. வழக்கு காலத்துக்கு முன்பாக வாங்கியவைகளையும் இவ்வழக்கில் தவறாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதாவை இவ் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்'' எனக் கூறி ஜெயலலிதா தரப்பின் வாதத்தை நிறைவு செய்தார்.

எனவே சொத்துக் குவிப்பு வழக்கில் 2-வது குற்றவாளியான சசிகலா தரப்பின் வாதம் இன்று தொடங்குகிறது. அவருக்காக கேரள உயர்நீதிமன்ற‌ முன்னாள் நீதிபதி ஆர்.பசன்ட் ஆஜராகிறார். இதனால் அடுத்தக்கட்ட விசாரணையை நீதிபதி குமாரசாமி புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

பின்வாங்கும் திமுக?

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் மூன்றாம் தரப்பாக சேர்க்கக் கோரிய திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி திமுக வழக்கறிஞர்களிடம், ‘நீங்கள் பவானிசிங்கை நீக்கக்கோரி டெல்லி போகவில்லை.உங்களை மூன்றாம் தரப்பாக சேர்க்க வேண்டுமா?'' என கேட்டார். அதற்கு குமரேசன்,‘‘நாங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு போவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. எங்களை அரசு வழக்கறிஞருக்கு உதவ அனுமதித்தால் மட்டும் போதுமானது'' என்றனர். இதனால் ஜெயலலிதா வழக்கறிஞர்களும், அரசு வழக்கறிஞர்களும் ஆச்சர்யம் அடைந்தனர்.

இதையடுத்து நீதிபதி குமாரசாமி,‘‘திமுக மனுவும்,சுப்பிரமணியன் சுவாமி மனுவும் ஒரே நோக்கத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் இரண்டையும் ஒன்றாகவே விசாரிக்கிறேன்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x