Published : 18 Apr 2015 08:18 AM
Last Updated : 18 Apr 2015 08:18 AM
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னர், ஓய்வெடுக்கச் சென்ற ராகுல் காந்தி, 56 நாட்கள் கழித்து பாங்காக்கில் இருந்து நேற்றுமுன்தினம் நாடு திரும்பினார். இந்நிலையில், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து, டெல்லியில் நாளை நடக்கும் விவசாயிகள் பேரணியில் ராகுல் பங்கேற்பார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாகப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகளை டெல்லியில் இன்று சந்தித்து ராகுல் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் இப்போது மோடி அரசால் அதில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்த உள்ளார். ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், திக்விஜய் சிங் ஆகியோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
நாளை டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்கிறார். ராகுல் காந்தி உரையாற்றுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விவசாயிகள் பேரணியை வைத்து கட்சியின் பலத்தை காட்ட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக ‘கிஸான் எக்ஸ்பிரஸ்’ ரயிலில் 17 பெட்டிகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜெய்ப்பூரில் இருந்து வரும் விவசாயிகள் டெல்லி பேரணியில் பங்கேற்கவுள்ளனர். பேரணிக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் செய்து வருகிறார்.
பேரணி முடிந்த பிறகு ராகுல் தனது சொந்த தொகுதியான அமேதிக்கு சென்று மக்களை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT