Published : 26 Feb 2017 04:48 PM
Last Updated : 26 Feb 2017 04:48 PM
மல்லையாவை சூசகமாகக் குறிப்பிட்ட நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நிதிமுறைகேடு செய்பவர்கள் நிரந்தரமாக தங்கி விட பிரிட்டனின் தாராளவாத ஜனநாயகம் இடம் கொடுக்கிறது என்று லண்டனில் பேசியுள்ளார்.
லண்டன் ஸ்கூல் ஆஃப் இகானமிக்ஸ், தெற்காசிய மையம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அருண் ஜேட்லி கூறியதாவது:
வங்கிகளிலிருந்து கடன் பெற்றால் அதனை திருப்பி செலுத்த வேண்டிய தேவையில்லை, லண்டனுக்கு வந்து நிரந்தரமாக தங்கி விடலாம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இங்குள்ள தாராளமய ஜனநாயகமும் இத்தகையோர் தங்க அனுமதி அளிக்கிறது. இந்த ‘இயல்பு’ நிலையை உடைக்க வேண்டும்.
முதல் முறையாக வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, நிதிமுறைகேடு செய்யும் பேர்வழிகள் நாட்டை விட்டு ஓடுகின்றனர், அவர்கள் சொத்துக்கள் முடக்கப்படுகின்றன. இதுதான் இந்தியா முதல் முறையாக இவர்களுக்கு விடுக்கும் செய்தியாகும். இல்லையெனில் முறைகேடு செய்து விட்டு தப்பியோடுபவர்களுடன் நாம் வாழவே பழகியிருப்போம்.
இவ்வாறு கூறினார்.
ஆனால் மூத்த பிரிட்டன் அமைச்சர்கள், பிரிட்டன் வெளியுறவு செயலர் போரிஸ் ஜான்சன் ஆகியோரை நாளை (திங்கள்) சந்திக்கும் போது மல்லையா விவகாரம் விவாதிக்கப்படுமா என்பது பற்றி ஜேட்லி உறுதியாகக் கூறவில்லை.
இருப்பினும், லண்டனில் உள்ள மூத்த அதிகாரிகள் மல்லையா விவகாரமும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT