Last Updated : 24 Sep, 2015 01:34 PM

 

Published : 24 Sep 2015 01:34 PM
Last Updated : 24 Sep 2015 01:34 PM

தொழில்நுட்ப புரட்சிக்கு தயார் நிலையில் இந்தியா: மோடியை வரவேற்று சுந்தர் பிச்சை புகழாரம்

அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று யூடியூபில் பேசியுள்ள கூகுள் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, "இதுவரை திறமைகளை ஏற்றுமதி செய்துவந்த இந்தியா தற்போது ஒரு தொழில்நுட்ப புரட்சிக்கு தயாராகிவிட்டது" என புகழ்ந்துள்ளார். | வீடியோ இணைப்பு கீழே |

அவரது உரை:

"அமெரிக்கா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதில் நான் மட்டுமல்ல கூகுள் நிறுவனத்தின் அனைத்து தொழிலாளர்களும் பெருமிதம் கொள்கிறோம். அதேபோல், அமெரிக்கா வாழ் இந்திய சமூகத்தினர் அனைவரும் மோடி வருகையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நட்பு மிகவும் வலுவானது. இதுவரை, அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களுக்கு இந்தியா திறமைசாலிகளை ஏற்றுமதி செய்திருக்கிறது.

இந்திய பட்டதாரிகளும், ஐ.ஐ.டி.யில் பட்டம் பயின்றவர்களும் உலகம் முழுவதும் தொழில்நுட்ப துறையில் பல்வேறு புரட்சிகளை செய்திருக்கின்றனர்.

ஆனால், தற்போது இந்தியா ஒரு தொழில்நுட்ப புரட்சிக்கு தயாராகிவிட்டது. இது இந்தியர்கள் அனைவருக்கும் பலனளிக்கும். இணையத்தை பயன்படுத்தும் முதல் தலைமுறையினர் அதிகரிப்பர். குறிப்பாக கிராமங்களில் இணையம் தடம் பதிக்கும்.

பெண்கள் புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள உதவும். அதன்மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில் முனைவர் பயன் பெறுவர். அடுத்த தலைமுறைக்கான சக்தி வாய்ந்த கல்வி இணைய கல்வி. இந்த புரட்சிக்கு மையம் பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வையே.

இந்தியாவில் உள்ள 1.2 பில்லியன் மக்களை இணைப்பதே பிரதமரின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வையின் அடித்தளம். குறைந்த பேண்ட்வித்தில் இணைய சேவையை நிறைய பேருக்கு அளிக்க வேண்டும் என்பதே கூகுள் நிறுவனத்தின் எதிர்கால திட்டம்.

நீங்கள் சான் ஜோஸ் (கூகுள் தலைமையகம் அமைந்துள்ள இடம்) வரும்போது எங்களது சேப் மையங்களை பார்வையிட்டு உங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். உங்களது வருகை எங்களுக்கும், இந்தியர்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கிறோம்"

இவ்வாறு சுந்தர் பிச்சை பேசியுள்ளார்.