Published : 27 May 2016 09:41 AM
Last Updated : 27 May 2016 09:41 AM

தெலுங்கு தேசம் மாநாடு இன்று தொடக்கம்: போக்குவரத்தை மாற்றியதால் பயணிகள் அவதி

தெலுங்கு தேச கட்சியின் மாநாடு இன்று திருப்பதியில் தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டிற்காக போலீஸார் வாகன போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டுள்ளனர். இதனால் திருப்பதிக்கு வரும் வெளியூர் பக்தர்கள், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

ஆந்திராவின் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு இன்று திருப்பதியில் தொடங்குகிறது.

வரும் ஞாயிற்றுக் கிழமை வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டிற்காக போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாநாடு நடைபெறும் நேரு அரசு பள்ளி மைதானம் வழியாக பஸ், லாரிகள் மற்றும் தனியார் வாகனங்கள் மாற்று பாதையில் திசை திருப்பப்பட உள்ளதால், இந்த வழியாக அலிபிரி செல்லும் பக்தர்கள், நடைபாதை வழியாக செல்வோர், உள்ளூர்வாசிகள் மிகுந்த சிரமப்பட நேரிடும்.

ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களில் இருந்து சுமார் 30 ஆயிரம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த மாநாட்டுக்கு வர உள்ளனர். ஏற்கெனவே நேற்று முதல் திருப்பதியில் உள்ள தேவஸ்தான சத்திரங்கள், தங்கும் விடுதிகள், தனியார் லாட்ஜ்கள் கட்சியினர் தங்குவதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் போதிய அறைகள் கிடைக்காமல் உள்ளனர்.

மாநாட்டுக்காக அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துள்ள நிலையில், நேற்று தெலுங்கு தேச கட்சியின் தேசிய செயலாளரும், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான லோகேஷ் விழா மேடை மற்றும் ஏற்பாடுகளை பார்வையிட்டார். அப்போது விழா மேடையின் அமைப்பு சரியில்லை என அவர் கட்சி மூத்த நிர்வாகிகளிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

600 சமையல்காரர்கள்

மாநாட்டில் ஆந்திர வகை உணவு தயாரிக்க பல மாநிலங்களில் இருந்து 600 சமையல்காரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாளர்களாக 300 பேர் வந்துள்ளனர். காலை 6 வகையான சிற்றுண்டி, மதியம் 30 வகை உணவு, இரவு மீண்டும் 6 வகையான சிற்றுண்டி தயாரிக்கப்படுகிறது. மாநாட்டின் ஏற்பாடுகளுக்காக 18 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று இரவு முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். மாநாடு நடைபெற உள்ள 3 நாட்களும் திருப்பதி அடுத்துள்ள சொந்த ஊரான நாராவாரிபல்லி கிராமத்தில் முதல்வர் தங்க உள்ளார். மாநாட்டில் ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறாதவாறு, 3,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x