Published : 18 Apr 2015 07:59 AM
Last Updated : 18 Apr 2015 07:59 AM

திருப்பதியில் 20 தமிழர்கள் என்கவுன்ட்டர்: மேலும் 5 உடல்களுக்கு மறு பிரேதப் பரிசோதனை - ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆந்திர போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டவர்களில் 6 பேரின் உடல்களுக்கு சென்னையில் மறு பிரேத பரிசோதனை நடத்தும்படி ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் கடந்த 7-ம் தேதி திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20 தொழிலாளர்கள் ஆந்திர போலீஸாரால் என் கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் திருவண்ணாமலை மாவட் டத்தை சேர்ந்த சசிகுமாரின் மனைவி முனியம்மாள், இது போலி என்கவுன்ட்டர் என்றும், சம்மந்தப்பட்ட போலீஸார் மீது கொலை, ஆள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்றும், இதன் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் சந்திரகிரி போலீஸில் புகார் செய்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்ட போலீஸார் மீது கொலை மற்றும் ஆள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்ய ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் அடையாளம் தெரியாத 24 போலீஸார் மீது சந்திரகிரி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதில், முனியம்மாள் தனது கணவரின் சாவில் மர்மம் இருப்ப தாகவும், உடலில் பல இடங்களில் மர்ம காயங்கள் இருப்பதால் மறு பிரேத பரிசோதனை செய்ய நீதி மன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம், சசிகுமாரின் உடலுக்கு மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த என்கவுன்ட் டரில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டம் வேட்டகிரிபாளையத்தை சேர்ந்த முருகன், பெருமாள், காந்தி நகரை சேர்ந்த மகேந்திரன் மற்றும் முருகபாடியை சேர்ந்த முனுசாமி, மூர்த்தி ஆகிய 5 பேரின் உறவினர்களும் மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடக்கோரி நேற்று காலை ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த நீதிமன்றம், முருகன், பெருமாள், மகேந்திரன், முனுசாமி மற்றும் மூர்த்தி ஆகிய 5 பேரின் சடலங்களை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஹைதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனை மற்றும் உஸ்மானியா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து 2 டாக்டர்கள் குழுவை பரிந்துரை செய்துள்ளது. இவர்களது முன்னிலையில் சென்னையில் 6 பேரின் உடல்களும் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளன.

மறு பிரேத பரிசோதனை நடத்தப்படும் சென்னை அரசு மருத்துவமனை அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமெனவும், ஆந்திர மருத்துவ குழுக்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டு மெனவும் தமிழக தலைமை செயலருக்கு ஆந்திர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x