Last Updated : 17 Apr, 2015 01:39 PM

 

Published : 17 Apr 2015 01:39 PM
Last Updated : 17 Apr 2015 01:39 PM

ஜெயலலிதா ஜாமீனை மே 12 வரை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட் டோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மே 12-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பு வழங்க கூடுதல் அவகாசம் கேட்டு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுத்த கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று ஜாமீனில் உள்ளனர். அவர்களது ஜாமீன் இன்றுடன் முடிகிறது. ஜாமீனை நீட்டிக்கக் கோரி, அவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தொடர்ந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் மேல்முறையீட்டு வழக்கில் ஆஜரானது செல்லாது என்று நீதிபதி மதன் லோக்கூரும், ஆஜரானது செல்லும் என்று நீதிபதி பானுமதியும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இவ்வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 21-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

பதிவாளர் கடிதம்

மேலும் ஏப்ரல் 18-ம் தேதிக்குள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கை முடிக்க வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தீர்ப்பு வழங்க கூடுதல் அவகாசம் கேட்டு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, பதிவாளர் மூலம் உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்த விவரங்களை பரிசீலித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, தீர்ப்பு வழங்க மே 12-ம் தேதி வரை அவகாசம் அளித்து நீதிபதி குமாரசாமிக்கு அனுமதி அளித்தது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் கூடுதல் அவகாசம் தேவைப்பட்டாலும் நீதிபதி குமாரசாமி வேண்டுகோள் விடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் சார்பில் ஜாமீன் நீட்டிப்பு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவர்களது ஜாமீனை மே 12-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் 3 மாதங்கள்

பவானிசிங் ஆஜரானது தவறு என்ற நீதிபதி மதன் லோக்கூரின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்றுக்கொண்டால், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் மேல்முறையீட்டு வழக்கு மீண்டும் வேறு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு புதிதாக விசாரிக்கப்படும். இதற்கு மேலும் மூன்று, நான்கு மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x