Last Updated : 22 Apr, 2015 12:10 PM

 

Published : 22 Apr 2015 12:10 PM
Last Updated : 22 Apr 2015 12:10 PM

ஜெ. வழக்கு: பவானி சிங்கை நீக்கக் கோரும் மனு மீது ஏப்.27-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பவானி சிங் நியமனம் தவறே என்றாலும் புதிதாக விசாரிக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

*

"ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது தவறானது. எனினும், இந்த வழக்கில் மறு விசாரணை நடத்த தேவையில்லை. மேல்முறை யீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இனி எந்தத் தடையும் இல்லை" என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதி மன்றத்தில் ஜெயலலிதா மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகி வருகிறார்.

இந்நிலையில், “ஜெயலலிதா தரப்பினருக்கு ஆதரவாக பவானி சிங் செயல்படுகிறார். எனவே, மேல்முறையீடு விசாரணையில் அவர் ஆஜரானது செல்லாது என அறிவிக்க வேண்டும்” என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை எம்.பி.லோக்கூர், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து இரு வேறுவிதமான தீர்ப்பு வழங்கினர். மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் ஆஜரானது தவறு என்று நீதிபதி லோக்கூரும், அதில் தவறில்லை, சரிதான் என்று நீதிபதி பானுமதியும் தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பி.சி.பந்த் ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

இந்நிலையில், க.அன்பழகன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை யிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது. “ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை தமிழக அரசு நியமித்துள்ளது. அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை’’ என்று அன்பழகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அந்திஅர்ஜுனா வாதாடினார்.

ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலி எஸ்.நரிமன் வாதிடும்போது, “அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது செல்லும்” என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:

சொத்துக் குவிப்பு வழக்கு ஏற்கெனவே 18 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. இனியும் இந்த வழக்கில் தாமதம் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்ததில் முறை கேடுகள் நடந்துள்ளது தெரிகிறது. எனினும், மேல்முறையீட்டு வழக்கில் மறு விசாரணை தேவையில்லை. அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமனம் சரியானதல்ல. எனினும், இந்த வழக்கில் மறுவிசாரணை தேவையில்லை. அன்பழகன் மனு மீதான இறுதித் தீர்ப்பு வரும் 27-ம் தேதி வழங்கப்படும்.

எனவே, மேற்கொண்டு ஏதாவது தெரிவிக்க அன்பழகன் தரப்பு விரும்பினால், அதை எழுத்துப்பூர்வமாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவற்றை கவனத்தில் கொண்ட பிறகு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும்.

மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க இனியும் தாமதம் ஏற்படக் கூடாது. மறு விசாரணை தேவையில்லை என்றாகி விட்ட தால், தீர்ப்பு வழங்குவதில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிக்கு இனி எந்தத் தடையும் இல்லை.

இவ்வாறு நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. முன்னதாக ஜெய லலிதாவின் ஜாமீனை மே 12-ம் தேதி வரை நீட்டித்து கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, மே 12-ம் தேதிக்குள் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x