Last Updated : 19 May, 2015 08:34 AM

 

Published : 19 May 2015 08:34 AM
Last Updated : 19 May 2015 08:34 AM

சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் திமுக வழக்கறிஞர்கள்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கடந்த 19 ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் நடந்த சொத்துக்குவிப்பு வழக்கின் ஒவ்வொரு அசைவையும் ஒவ் வொரு அங்குலத்தையும் நேரடி யாகவும் மறைமுகமாகவும் தீர் மானித்தவ‌ர்கள் திமுக வழக்கறிஞர்கள்.

சுப்பிரமணியன் சுவாமியின் புகாரை அடிப்படையாகக் கொண்டு 18.9.1996-ல் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தபோது திமுக ஆட்சியில் இருந்தது.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போயஸ் கார்டனில் சோதனை நடத்தியது, வழக்கை பெங்களூரு வுக்கு மாற்றிய‌து, மூன்றாவது தரப்பாக சேர்ந்து எழுத்துப்பூர்வ மாக வாதிட்டது, ஜெயலலிதா வுக்கு தண்டனை வாங்கி தந்தது, மேல்முறையீட்டில் பவானி சிங்கை நீக்கியது, தற்போது விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவது வரை திமுக தரப்பு இடைவிடாது இயங்கி கொண்டிருக்கிறது.

அதன்படி வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தலைமையில் சிறப்பு நீதிமன்றத்துக்கு தாமரை செல்வன், உயர் நீதிமன்றத்துக்கு சி.வி.நாகேஷ், உச்ச நீதிமன்றத்துக்கு அந்தி அர்ஜூனா என பெரும் வழக்கறிஞர் படையே செயல்படுகிறது.

தளராத தாமரை செல்வன்

முன்னாள் மக்களவை உறுப்பினரான தாமரை செல்வன் தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவத்துக்கு பிறகு திமுகவில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர் சொத்துக்குவிப்பு வழக்கின் வரலாற்றிலும் தவிர்க்க முடியாத மனிதர்.

2013-ம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா இருந்தபோது சொத்துக்குவிப்பு வழக்கு வழக்கத்தை விட வேகமாக பயணித்து கொண்டிருந்தது.

ஒரே மூச்சில் ஜெயலலிதா தரப்பும், அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கும் சூறாவளியென இறுதிவாதத்தை முடித்து தீர்ப்பை நெருங்கிக் கொண்டிருந்தனர். ஓய்வு பெறுவதற்கு முன்பாக தீர்ப்பை எழுதிவிட வேண்டுமென நீதிபதியும் சுறுசுறுப்புக் காட்டினார்.

இன்னும் ஒரு வாரத்தில் வழக்கு முடிந்துவிடும் என எதிர்பார்த்தபோது, 18.8.2013 அன்று தாமரைச்செல்வன், 'திமுகவை மூன்றாம் தரப்பாக சேர்க்க வேண்டும்' என மனு போட்டார். அதைத் தொடர்ந்து, 'ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படும் பாவனி சிங்கை நீக்க வேண்டும்' எனவும் மனு தாக்கல் செய்தார். இதனால் சொத்துக்குவிப்பு வழக்கின் போக்கில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து, பாலகிருஷ்ணாவுக்கு பதிலாக நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வந்தார்.

அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதத்தைக் கண்டு வெறுப்படைந்த திமுக தரப்பு சுமார் 500 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தனர். அதை அடிப்படையாகக் கொண்டே நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனையை தீர்மானித்தார்.

'ஒருவேளை தாமரைச்செல்வன் மட்டும் நீதிமன்றத்துக்கு வராமல் போய் இருந்தால் 2013-ம் ஆண்டே ஜெயலலிதா விடுதலை ஆகி இருப்பார்' என அதிமுக வழக்கறிஞர்களே சொல்வார்கள்.

மற்றொரு திமுக வழக்கறிஞர் சரவணன் வாதாடுவதில் வல்லவர். சொத்துக்குவிப்பு வழக்கின் அத்தனை அம்சங்களையும் கரைத்து குடித்துள்ள இவருக்கு ஜெயலலிதா தரப்புக்கு எதிரான மனுக்களை தயாரிப்பதில் தொடங்கி, பவானிசிங்கை நீக்கியது வரை முக்கிய பங்கு இருக்கிறது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத் திலும், கர்நாடக உயர்நீதிமன்றத் திலும் மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினாலும், பின்னால் இருந்து முக்கிய பாயிண்டு களை எடுத்துக்கொடுப்பார்.

மேல்முறையீட்டு விசாரணை யின் போது திமுக மூத்த வழக்கறிஞர் சி.வி.நாகேஷ், வேலைப்பளுவின் காரணமாக ஆஜராகவில்லை. வேறு சில மூத்த வழக்கறிஞர்களை கேட்டபோது வாதிட மறுத்துவிட்டனர்.

நீதிமன்றம் கூடியதும் நீதிபதி குமாரசாமி, 'எங்கே திமுக வழக்கறிஞர்?' என்றதும், 'மூத்த வழக்கறிஞர் இல்லாததால் வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்' என சரவணன் கேட்டார். அதற்கு 'நீங்களும் வழக்கறிஞர்தானே வாதிடுங்கள், குற்றவியல் நடைமுறை சட்டவிதிகள் தெரியும் தானே?' என்று குமாரசாமி கேட்டுக் கொண்டார். அதன்படி வாதத்தை தொடங்கிய சரவணன் சுமார் ஒன்றரை மணி நேரம் இடைவிடாமல் வாதிட்டார்.

உளவு நடேசன்

பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞர் நடேசனின் சொந்த ஊர் திருவண்ணாமலை அருகே யுள்ள செங்கம். அழகிரியின் நண்பரான இவர், 2006-ம் ஆண்டில் இருந்து நீதிமன்றத்துக்கு வருகிறார்.

ஜெயலலிதா தரப்பு அடுத் தடுத்து எந்தெந்த காய்களை நகர்த்துகிறார்கள் என்பதை உளவுப்பார்த்து தலைமைக்கு தகவல் கொடுப்பார்.

ஆச்சார்யா ராஜினாமா செய் ததைத் தொடர்ந்து, பவானிசிங்கை கண்காணிக்க தினமும் நீதிமன்றத் துக்கு வந்தார்.

இதே போல மேல்முறையீட்டு விசாரணையின் போதும் நீதிமன்றத்துக்கு வந்து, ஜெயலலிதா வழக்கறிஞர்களின் வாதத்தை உன்னிப்பாக கவனிப் பார். உள்ளூர் வழக்கறிஞரான இவரது உதவியோடுதான் திமுக வழக்கறிஞர்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பல வேலை களை எளிதாக முடித்தார்கள்.

விசுவாச பாலாஜி சிங்

ஓசூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி சிங், 2013 முதல் அன்பழகன் தரப்பு வழக்கறிஞராக நீதிமன்றத்தில் ஆஜராகிறார். இதுவரை அவர் ஒரு ரூபாய் கூட ஊதியம் வாங்கியதில்லை. தனது தந்தை ராம்சிங்கின் இறப்புக்கு திமுக தலைவர் கருணாநிதி உருக்கமாக விடுத்த இரங்கல் செய்தியே போதும் என்பார் பாலாஜிசிங்.

(இன்னும் வருவார்கள்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x