Published : 18 Apr 2014 11:58 AM
Last Updated : 18 Apr 2014 11:58 AM

சீமாந்திரா: முக்கிய தலைவர்கள் மனு தாக்கல்

ஆந்திர மாநிலம் சீமாந்திரா பகுதியில் சந்திர பாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி, நடிகை ரோஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

சீமாந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த 12-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை முடிகிறது. வெள்ளிக்கிழமை புனித வெள்ளி விடுமுறை என்பதால், வியாழக்கிழமை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

குப்பம் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சந்திரபாபு நாயுடு சார்பில் அவரது மகன் லோகேஷ் மனு தாக்கல் செய்தார்.

இதேபோன்று, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கடப்பா மாவட்டம் புலிவேந்துலா சட்டமன்றத் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக இவர், தனது தந்தை ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

இவரது தாயாரும் கட்சியின் கவுரவ தலைவருமான ஒய்.எஸ். விஜயலட்சுமி, விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். நகரி சட்டமன்றத் தொகுதிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகை ரோஜா மனு தாக்கல் செய்தார்.

புலிவேந்துலாவில் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x