Published : 24 Aug 2016 12:37 PM
Last Updated : 24 Aug 2016 12:37 PM

சாரதா நிதி நிறுவன மோசடி: நளினி சிதம்பரத்துக்கு சம்மன்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செப்டம்பர் முதல் வாரத்தில் கொல்கத்தாவில் விசாரணை குழு முன்னர் ஆஜராகுமாறு நளினி சிதம்பரத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய ஆதாரங்கள் சில வெளியாகியுள்ளதையடுத்து நளினி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தாவை மையமாக கொண்டு சுதீப்தா சென் என்பவர் நடத்திவரும் சாரதா சிட் பண்ட் நிறுவனம் பொது மக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி வரை சுருட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் சுதீப்தா சென் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் 6-வது துணை குற்ற பத்திரிக்கையில் நளினி சிதம்பரத்தின் பெயர் சேர்க்கப்பட்டது.

ஆனால், அவர் குற்றவாளியாகவோ, சாட்சியாகவோ சேர்க்கப்படவில்லை. அதே சமயம், பணப் பரிவர்த்தனையில் நளினிக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக நளினி ஏற்கெனவே அமலாக்கப்பிரிவு, சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார்.

இந்நிலையில், அவருக்கு அமலாக்கப் பிரிவு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x