Published : 22 May 2015 07:39 PM
Last Updated : 22 May 2015 07:39 PM
பிஹார் மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளேன், பாதிப்பை ஏற்படுத்தும் ஜாதிப் பிரிவினைக்கு அப்பாற்பட்டு பிஹார் மக்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கவிஞர் ராம்தாரி சிங் திங்கரின் படைப்புகளின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தை டெல்லியில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவின் மேற்குப்பகுதி வளம் கொழிக்கலாம். ஆனால், கிழக்குப்பகுதியின் ஞானம் அதனை முழுமைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா தனது முழுத்திறனை அடைய முடியாது. செல்வமும் கல்வியும் இணைந்தால், இந்தியா எவ்வளவு வேகமாக முன்னேறும் என்பதை இந்த உலகம் காணும்.
பிஹார் ஜாதியை மறந்துவிட்டு நல்லொழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும். ஓரிரு ஜாதிகளின் உதவியுடன் நீங்கள் ஆட்சி நடத்த முடியாது. அனைவரின் ஆதரவும் தேவை. நீங்கள் ஜாதிக்கு அப்பாற்பட்டு செயல்படாவிட்டால் பிஹார் மக்களின் வாழ்க்கை அழிந்துவிடும் என கவிஞர் திங்கர் 1961களிலேயே தனது படைப்பில் தெரிவித்திருக்கிறார்.
ராம்தாரி சிங் திங்கரின் படைப்புகள் ஜெயப்பிரகாஷ் நாராயணின் கொள்கைகளுக்கும் இளைஞர்களுக்கும் இடையே பாலமாக விளங்குகின்றன. அவரின் படைப்புகளில் கனல் இருக்கிறது. அது எரித்துவிடுவது அல்ல. மாறாக வருங்கால தலைமுறைக்கு ஒளியூட்டுபவை. அவரின் படைப்புகள் தற்காலத்துக்கும் பொருத்தமாக இருக்கின்றன.
தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மேற்கு வங்கம், பிஹார், கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி மிக முக்கியமானது.
இவ்வாறு அவர் பேசினார்.
கவிஞர் ராம்தாரி சிங் பொன் விழாவை பாஜக கையிலெடுத் திருப்பது, பிஹாரில் சட்டப் பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் முக்கிய நடவடிக்கை யாகக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT