Last Updated : 29 Jan, 2015 10:35 AM

 

Published : 29 Jan 2015 10:35 AM
Last Updated : 29 Jan 2015 10:35 AM

சசிகலா தரப்புக்கு நீதிபதி கண்டனம் - சொத்துப் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மூலம் ஊடக வெளிச்சம் பெறுவதற் காக நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்து இருக்கிறார். ஊடகங்களும் இவ்வழக்கு தொடர்பான செய்திகளை மிகைப்படுத்தி வெளியிட்டன எனக் கூறிய சசிகலா தரப்புக்கு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதி மன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பில் வாதம் நேற்றுமுன்தினம் முடிவடைந்ததால், வழக்கின் 2-வது குற்றவாளியான சசிகலாவின் தரப்பின் இறுதிவாதம் நேற்று தொடங்கியது.

சசிகலா தரப்பில் கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.பசன்ட், வழக்கறிஞர் மணிசங்கர் உள்ளிட்டோர் ஆஜராயினர்.

சசிகலாவின் வழக்கறிஞர் ஆர்.பசன்ட் வாதிட்டதாவது:

சசிகலா, ‘வினோத் வீடியோ விஷன்' என்ற தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். ஜெயலலிதா நடிகையாகவும் அரசியல்வாதியாகவும் இருந்ததால் அவருக்கு புகைப்படம், வீடியோ எடுக்கும் பணியை சசிகலா செய்து வந்தார்.

தொழில் ரீதியாக பழகியவர்கள் நாளடைவில் நண்பர்கள் ஆனார்கள். ஒரு கட்டத்தில் ஜெயலலிதா தனது வீட்டிலே தங்குமாறு சசிகலாவை கேட்டுக்கொண்டதால் அவர் போயஸ் கார்டனில் குடியேறினார். அதன்பிறகு சசிகலாவின் சகோதரி மகன் சுதாகரன் சென்னைக்கு வந்து தனது சின்னம்மாவுடன் தங்கினார். ஜெயலலிதாவின் திராட்சை தோட்டத்தில் பணியாற்றிய இளவரசி யின் கணவர் விபத்தில் இறந்ததால், அவரும் சசிகலாவுடன் தங்கினார்.

சசிகலா, சுதாகரன், இளவரசி, ஜெயலலிதா ஆகியோர் ஒரே வீட்டில் தங்கியிருந்ததால், மற்ற மூவரும் ஜெயலலிதாவின் பினாமிகள் என லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியது.

பினாமி சட்டப்படி ரத்த உறவுகள் மட்டுமே பினாமியாக இருக்க முடியும். அதே போல இந்த மூவரின் சொத்து களையும்,ஜெயலலிதாவின் சொத்துகள் எனக் கூறுவதை ஏற்க முடியாது.

ஜெயலலிதா அரசியல் தலைவராக இருப்பதால் அவர் மீதான வழக்கை ஊடகங்கள் பரபரப்பாக எழுதுகின்றன. நீதிமன்றத்தில் நடக்கும் விவகாரங்களை ஊடகங்கள் மிகைப்படுத்தி காட்டிவரு கின்றன. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா தன்னை கதாநாயகனாக காட்ட முயற்சித் துள்ளார். ஊடக வெளிச்சம் பெறுவதற் காகவே அவர் அடிப்படை ஆதாரம் இல்லாமல் இத்தகைய தீர்ப்பை அளித்துள்ளார்''என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “ஊடகங்களை குறைக்கூறாதீர்கள்.அவர்கள் தங்களுடைய பணியை செய்கிறார்கள். உங்களுக்கு விருப்பம் இல்லாவிடில் ஊடகங்களிடம் வழக்கு குறித்து பேசாதீர்கள். இந்த வழக்கு பற்றிய 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களையும், ஏராளமான சாட்சியங்களையும் ஆராய்ந்து நீதிபதி குன்ஹா தீர்ப்பை வழங்கி யுள்ளார்.

வழக்கில் சசிகலாவின் தொடர்பை புரிந்துகொள்வதற்காக அவரது வருமானம், அதற்கான ஆதாரம், சொத்துகள் குறித்த விரிவான பட்டியலை தாக்கல் செய்யுங்கள்''என கண்டிப்புடன் கூறினார். இதையடுத்து அடுத்தக்கட்ட விசாரணை வியாழக் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சுவாமி மனு ஏற்பு

இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கின் புகார்தாரர் சுப்பிரமணியன் சுவாமியின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி குமாரசாமி,அதற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஜெயலலிதா தரப்புக்கும், அரசு தரப்புக்கும் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x