Published : 22 Dec 2014 12:15 PM
Last Updated : 22 Dec 2014 12:15 PM
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 8 கிறிஸ்துவ குடும்பத்தினரை இந்து மதத்துக்கு மதமாற்றம் செய்ததாக அம்மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
கேரள விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் செங்கனூர் பிரிவை ஆலப்புழாவில் 'கர் வாப்ஸி' எனப்படும் மதமாற்ற நிகழ்ச்சி நேற்று (ஞாயிறு) அன்று நடத்தப்பட்டதாக அந்த அமைப்பின் தலைவர் பிரதாப் ஜி.படிக்கல் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், " நாங்கள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு பெந்தகோஸ்டல் அமைப்பைச் சேர்ந்த சில குடும்பத்தினர் தாங்களாகவே முன்வந்து பங்கேற்றனர்.
அவர்கள் யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களுக்கு எங்களது சார்பில் நிதி உதவி வழங்கப்படும் என்ற உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. இதற்கான நிகழ்ச்சி கனிச்சநல்லூர் கோயிலில் அதிகாலை நடந்தது.
மேலும் சுமார் 150 குடும்பத்தினர் இந்து மதத்துக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்காக மாநிலம் எங்கிலும் 'கர் வாப்ஸி' நடத்த விரைவில் ஏற்பாடு செய்யப்படும்" என்றார். அதிகம் விளம்பரப்படுத்தப்படாத இந்த மதமாற்ற நிகழ்ச்சி காலை 5.30 மணியளவில் தொடங்கி சுமார் 5 மணி நேரம் நடந்தது.
இதனிடையே மதமாற்றம் செய்த குடும்பத்தினர் குறித்த விவரங்கள் எதுவும் சேகரிக்க முடியவில்லை. அதனால் அவர்களது விவரங்கள் குறித்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினரிடம் விசாரித்தபோது அவர்கள் வேறு இடங்களுக்கு சென்றுவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT