Published : 24 Oct 2014 10:08 AM
Last Updated : 24 Oct 2014 10:08 AM
தீபாவளி பண்டிகையின்போது, சியாச்சினில் எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் காஷ்மீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பி.சி.சாக்கோ கூறும்போது, ‘பிரதமரின் விஜயம் அவரது கட்சிக்கு அரசியல் ஆதாயம் தேடித் தருவதற்காக செய்யப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவரது விஜயம் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது.’ எனத் தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவரான தாரீக் அன்வர், ‘சட்டசபை தேர்தல் வருவதை முன்னிட்டு அரசியல் ஆதாயம் தேடவே மோடி தீபாவளி தினத்தில் ஜம்மு-காஷ்மீர் சென்றிருப்பதாக’ தெரிவித்தார். இக்கட்சியின் மற்றொரு தலைவரான மஜீத் மேமன், ‘அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையிலேயே உதவும் பொருட்டு செல்கிறார் எனில் நல்லது. ஆனால், அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவது கண்டிக்கத்தக்கது’ எனவும் கூறியுள்ளார்.
பாஜக மறுப்பு
இவர்கள் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பாஜக செய்தித் தொடர்பாளரான சம்பித் பத்ரா கூறும்போது, “பாதிக்கப்பட்ட மக்களின் கவலையை பகிர்ந்து கொள்ள பிரதமர் செல்வதில் உள்நோக்கம் கற்பித்து அரசியலாக்கப்படுவது ஆச்சரியமாக உள்ளது. இதற்காக அவர்கள் பிரதமரை பாராட்ட வேண்டும். தவிர, இப்படி விமர்சனம் செய்வது மிகவும் தவறானது’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT