Published : 23 Jul 2016 02:49 PM
Last Updated : 23 Jul 2016 02:49 PM
காஷ்மீரில் 4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த புர்ஹான் வானி பாதுக்காப்புப் படையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
இதனைக் கண்டித்து காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை 45 பேர் பலியாகியுள்ளனர். கலவரங்களைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் பரவலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) பந்திப்பூரா, பாரமுல்லா, புட்காம், கண்டர்பால் ஆகிய 4 மாவட்டங்களிலும் தலைநகர் ஸ்ரீநகரில் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆனாலும், அனந்தநாக், குல்காம், குப்வாரா, புல்வாமா, சோபியான் மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.
ராஜ்நாத் வருகிறார்:
இதற்கிடையில் காஷ்மீர் கள நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (சனிக்கிழமை) மாலை அங்கு செல்கிறார்.
மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். பின்னர் நாளை (சனிக்கிழமை) பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், உள்ளூர் வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை மாலை மீண்டும் அவர் டெல்லி திரும்புவார் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT