Published : 07 Jul 2016 08:45 AM
Last Updated : 07 Jul 2016 08:45 AM

கழிப்பறை கட்ட சொல்லி காலில் விழும் ஊராட்சித் தலைவர்

திறந்தவெளியில் மலம் கழிக்க வேண்டாம்; வீட்டில் கழிப்பறை கட்டுங்கள் எனக் கூறி கர்நாடகாவில் ஊராட்சித் தலைவர் ஒருவர் மக்களின் காலில் விழுந்து கெஞ்சி வருகிறார்.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் கங்கவாதி அருகே ராம்நகர் கிராமம் உள்ளது. இங்குள்ள 2,100 வீடுகளில் 441 பேரின் வீடுகளில் மட்டுமே கழிப்பறை உள்ளது.

பெரும்பாலானவர்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், கிராமமும் அசுத்தமடைகிறது. எனவே, வீடுதோறும் கழிப்பறை கட்ட வேண்டும் என்ற பிரச்சாரத்தை ஊராட்சித் தலைவர் ஸ்ரீநிவாஸ் கர்தூரி மேற்கொண்டார்.

எனினும், திறந்தவெளி கழிப்பிடத்தைப் பயன்படுத்துவது குறையவில்லை. இதனைத் தடுக்க சமீபகாலமாக ஸ்ரீநிவாஸ் கர்தூரி வித்தியாசமான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அதாவது காலை நேரத்தில் மலம் கழிக்க மறைவான இடங்களுக்கு செல்லும் ஆண்களையும், பெண்களையும் வழிமறித்து காலில் விழுந்து, கழிப்பறை கட்டுமாறு வேண்டுகோள் விடுக்கிறார். னிவாஸ் கர்தூரியின் இத்தகைய வினோத கோரிக்கையால் தற்போது சில வீடுகளில் கழிப்பறை கட்டும் பணி தொடங்கியுள்ளது.

அதே நேரத்தில் கிராம மக்களில் சிலர், அவசரத்துக்கு வெளியே செல்லும்போது, மறைந்திருக்கும் ஸ்ரீநிவாஸ் கர்தூரி திடீரென ஓடி வந்து காலில் விழுவதால் திடுக்கிட்டுப் போகின்றனர்.

காலைக்கடனை நிம்மதியாக கழிக்க முடியாமல் அவஸ்தைப் படுகின்றனர். இதனால் மக்கள், குறிப்பாக பெண்கள் அவர் இருக்கிறாரா என சுற்றும் முற்றும் தேடிவிட்டே காட்டுக்குள் செல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x