Published : 29 Aug 2014 04:42 PM
Last Updated : 29 Aug 2014 04:42 PM
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக, மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழுமத் தலை வருமான கலாநிதி மாறன் ஆகியோர் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மாறன் சகோதரர்கள் தவிர மேலும் 6 பேர் மற்றும் சன் டைரக்ட் டி.வி. பிரைவேட் லிமிடெட் உட்பட 4 நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. 6 தனிநபர்கள் தவிர சன் டைரக்ட் டிவி பிரைவேட் லிமிடட் உள்ளிட்ட 4 நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றங்கள் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள தனிநபர்கள், நிறுவனங்கள் மீது சாட்டப்பட்டுள்ளன.
குற்றப்பத்திரிகை மீது செப்டம்பர் 11-ல் விசாரணை நடைபெறுகிறது.
முன்னதாக நேற்று, ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக, தன் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தடுக்கக் கோரி, முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்பு வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
72 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப் பத்திரிகையில் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்த கிருஷ்ணன், ரால்ப் மார்ஷெல் உட்பட 8 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
தயாநிதி மாறன் மனு விபரம்:
இந்த வழக்கில் சிபிஐ இன்னும் விசாரணையை முழுமையாக முடிக்கவில்லை. விசாரணை நிறைவு பெறாத நிலையில், தன் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டத்தில் இடமில்லை என தயாநிதி மாறன் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கு பின்னணி:
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்த கிருஷ்ணன் அந்நிறுவனத்தை வாங்க உதவியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து 2011-ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவன பங்குகளில் ரூ.650 கோடியை மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு சிபிஐ, இந்த வழக்கில் இன்று டெல்லி 2ஜி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT