Published : 19 Feb 2017 12:15 PM
Last Updated : 19 Feb 2017 12:15 PM

உத்தரப் பிரதேச 4-ம் கட்ட தேர்தல்: 189 கோடீஸ்வரர்கள் போட்டி - 116 பேர் மீது கிரிமினல் வழக்கு

உத்தரப் பிரதேச நான்காம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 189 கோடீஸ்வரர்களும் 116 குற்றப் பின்னணி உடையவர்களும் போட்டியிடுகின்றனர்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நான்காம் கட்ட தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 680 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 98 வேட்பாளர்கள் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 87 பேர் அங்கீகாரமில்லாத கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 200 பேர் சுயேச்சைகள்.

வேட்பு மனு தாக்கல் செய்துள்ள 680 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

உத்தரப் பிரதேச 4-ம் கட்ட தேர்தலில் 189 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 45 பேர் பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் ஆவர். பாஜக 36, சமாஜ்வாதி 26, காங்கிரஸ் 17, ஆர்எல்டி 39, சுயேச்சைகள் 25 பேரிடம் ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.

மொத்தமுள்ள 680 வேட்பாளர்களில் 116 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள். அவர்களில் 95 வேட்பாளர்கள் மீது கொலை, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கட்சிகள் அடிப்படையில் பாஜக 19, சமாஜ்வாதி 13, பகுஜன் சமாஜ் 12, ஆர்எல்டி 9, காங்கிரஸ் 8 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான கல்வித் தகுதி பிரிவில் 268 வேட்பாளர்கள் உள்ளனர். 367 வேட்பாளர்கள் பட்டதாரிகள். 36 வேட்பாளர்கள் படிக்கத் தெரியும் என்றும் 6 பேர் படிக்கத் தெரியாது என்றும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் 171 வேட்பாளர்கள் தங்களின் பான் எண்ணை குறிப்பிடவில்லை.

25 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் 493 வேட்பாளர்களும் 51 வயது முதல் 80 வயது வரையில் 180 வேட்பாளர்களும் உள்ளனர். 60 பெண் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

இவ்வாறு ஏடிஆர் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x