Published : 29 Apr 2017 08:09 PM
Last Updated : 29 Apr 2017 08:09 PM
கேரள முன்னாள் டிஜிபி சென்குமார், கேரள அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு பதிவு செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருந்தபோது, ஐபிஎஸ் அதிகாரி டி.பி.சென்குமார் காவல் துறை தலைவராக (டிஜிபி) பதவி வகித்தார். 2016-ல் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தவுடன் டிஜிபி பதவியில் இருந்து சென்குமார் நீக்கப்பட்டு, வேறு பணிக்கு மாற்றப்பட்டார்.
மாநில அரசின் முடிவை எதிர்த்து சென்குமார் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மற்றும் கேரள உயர் நீதிமன்றம் அவருக்கு எதிராக தீர்ப்பளித்தன. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் சென்குமார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சென்குமாரை டிஜிபி பதவியில் நியமிக்குமாறு கேரள அரசுக்கு கடந்த 24-ம் தேதி உத்தரவிட்டது. ஆனால் இதுவரை சென்குமாருக்கு டிஜிபி பதவி வழங்கப்படவில்லை. இந்நிலையில், சென்குமார் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், “என்னை மீண்டும் டிஜிபி பதவியில் அமர்த்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. எனவே, கேரள அரசின் மீதும் அதன் தலைமைச் செயலாளர் நளினி நெட்டோ மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT