Published : 15 Sep 2015 07:50 AM
Last Updated : 15 Sep 2015 07:50 AM

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் அனைவரும் விடுதலை: படகுகளை விடுவிக்க நீதிமன்றங்கள் மறுப்பு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப் பட்ட 16 தமிழக மீனவர்களை அந்நாட்டு நீதிமன்றங்கள் நேற்று விடுதலை செய்தன. ஆனால், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க மறுத்துவிட்டன.

இலங்கையைச் சேர்ந்த கச்சத்தீவு, நெடுந்தீவு கட்டைக்காடு ஆகிய கடல் பகுதிகளில் தமிழக மீனவர்கள் 16 பேர் கடந்த 1-ம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தனித் தனியாக அவர்களை சிறைபிடித்தனர். மூன்று விசைப்படகுகளுடன் மீனவர்கள் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் தமிழக மீனவர்கள் 16 பேரும் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையடுத்து மண்டபம், ஜெகதாபட்டினத் தைச் சேர்ந்த மீனவர்கள் பருத்திதுறை நீதி மன்றத்தில் 2-ம் தேதி ஆஜர்படுத்தப் பட்டனர். நாகை மீனவர்கள் ஊர்க் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். அனைவரையும் 14-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து 16 தமிழக மீனவர் களையும், அவர்களது மூன்று விசைப்படகு களையும் இலங்கையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக நேற்று டெல்லி வந்தார். இவரது வருகையையொட்டி நல்லெண்ண அடிப்படை யில் 16 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை அரசு இரு நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

அதையடுத்து மீனவர்கள் பருத்தித்துறை, ஊர்காவல்துறை நீதிமன்றங்களில் தனித் தனியாக ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப் பட்டனர். ஆனால், மீனவர்களின் 3 விசைப் படகுகளை விடுவிக்க நீதிமன்றங்கள் மறுத்து விட்டன. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் நாளை தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x