Published : 25 Apr 2015 10:56 AM
Last Updated : 25 Apr 2015 10:56 AM

இந்தியாவின் பெயரை பாரதா என மாற்ற கோரி பொதுநல மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்ற நோட்டீஸ்

இந்தியாவின் பெயரை 'பாரதா' என்று மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நிரஞ்சன் பத்வால் உச்ச நீதிமன்றதில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்தியாவின் பெயரை பாரதா என மாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு நாட்டின் பெயர் மீது தெளிவான புரிதல் ஏற்பட வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப் பிரிவு 1-ல், 'பாரத்' என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரையின்படி 'பாரதா' என்றே அழைக்கப்பட வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அஜய் ஜி. மஜிதா, ராகுல் பாண்டே ஆகியோர், "இந்தியா என்ற பெயர் காலனி ஆதிக்கத்தின்போதுதான் உருவானது. பழமையான கல்வெட்டுகளிலும், வரலாற்றுச் சாட்சியங்களின்படியும் 'பாரதா' என்ற பெயரே நம் தேசத்துக்கு விளங்கியுள்ளது. அரசியல் சாசன சட்டப்பிரிவு 1-லும் இதே வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் சாசன சட்டப்பிரிவு 1-ஐ விளக்குவதோடு. இந்தியாவின் பெயரை 'பாரதா' என மாற்ற வேண்டும் என வாதிட்டனர்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளும் யூனியன் பிரேதேசங்களும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x