Published : 22 Nov 2014 07:48 PM
Last Updated : 22 Nov 2014 07:48 PM
"பயங்கரவாதம் என்பது இந்தியாவில் வளர்ந்ததல்ல, மாறாக அது புறக்காரணிகளால் தூண்டப்படுவது... அது பாகிஸ்தான்.” என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் தூண்டுகிறது என்றும், முக்கியக் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமை ஊட்டி வளர்க்கிறது பாகிஸ்தான் என்றும், தாவூத் தற்போது பாகிஸ்தான் - ஆப்கான் எல்லையில் இருப்பதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைப்பண்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் ராஜ்நாத் சிங் மேலும் கூறியதாவது:
இந்தியாவில் பயங்கரவாதம் என்பது முழுதும் பாகிஸ்தானால் நடத்தப்படுவதே. அரசுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் கூறினாலும், அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. என்ன அரசு தொடர்பில்லாமலா இயங்குகிறது? ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது.
2008-ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசாரணைக்கு பாகிஸ்தான் உதவுவதில்லை, மாறாக அதற்கு இடையூறு ஏற்படுத்தவே முயற்சி செய்கிறது.
பாகிஸ்தான் பிரதமர் இந்தியா வந்த போது, நமது பிரதமர், தாவூதை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து நாங்கள் இதையே வலியுறுத்தி வருகிறோம், அவர் சர்வதேச குற்றவாளி, தற்போது அவர் பாக்-ஆப்கன் எல்லையில் பதுங்கியுள்ளார்.
எனவே, எங்களுக்கு கால அவகாசம் கொடுங்கள், தாவூதை ஒப்படைக்க பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறோம்.
இருதரப்பு சுமுக உறவுகளுக்கு பாகிஸ்தானும் முயற்சிகள் எடுக்க வேண்டும். நாம் எப்போதும் நட்புறவு பாராட்டவே விரும்புகிறோம்.
விரைவில் இந்த விஷயத்தில் நன்மை பிறக்கும் என்று நம்புகிறேன்.” என்றார் ராஜ்நாத் சிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT