Published : 15 Sep 2016 10:04 AM
Last Updated : 15 Sep 2016 10:04 AM
பெங்களூருவில் வெடித்த வன்முறை காரணமாக அங்கு வசித்து வந்த ஏராளமான தமிழர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர்.
மேலும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அச்சம் காரணமாக வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் கட்டுமானம் உட்பட பல்வேறு தொழில்களுக்கு ஆள் கிடைக்காமல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
முடங்கிய மயானங்கள்
மேலும் பெங்களூருவில் உள்ள கல்லறை மற்றும் சுடுகாடுகளில் பணியாற்றி வந்த மயான ஊழியர்களும் தமிழகத்தில் உள்ள அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இதனால் பிணங்களை அடக்கம் செய்ய முடியாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூருவில் இலவசமாக அனாதை பிணங் களை எரிக்கும் விக்ரம மகாதேவா கூறும்போது,
“காவிரி கலவரம் அனைவரையும் பாதித்துள்ளது. இறுதி சடங்குகளை செய்யும் தொழிலாளர்கள் பெரும்பாலா னோர் தமிழர்கள் என்பதால் தற்போது அச்சத்தில் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் பெங்களூரு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பிணங்கள் அடக்கம் செய்யப்படாமலும், எரிக்கப்படாமலும் இருக்கின்றன. நான் மட்டும் ஒரு நாளைக்கு 10 முதல் 15 பிணங்களை அடக்கம் செய்கிறேன்''என்றார்.
கன்னடர்கள் தாக்குதல்
பெங்களூருவில் நடைபெற்ற வன்முறையின் போது குமார சுவாமி லே-அவுட் பகுதியில் வசித்துவரும் கர்நாடக மாநில அதிமுக பொருளாளர் ராஜேந்திரன் வீட்டை கன்னட அமைப்பினர் கல்வீசி தாக்கினர். அவருக்கு சொந்தமான வணிக வளாகம் மற்றும் நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து ராஜேந்திரன் சார்பில் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், அவரது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
மண்டியாவில் கன்னட அமைப்பினரின் போராட்டத்தை தொடர்ந்து அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் காலிக்குடங்களுடன் நேற்று சஞ்சய் சதுக்கத்தில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத் துக்கு காவிரி நீர் திறக்கப்பட் டுள்ளதால் கர்நாடகாவில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும், கர்நாடக அரசு தங்களுக்கு முதலில் காவிரி நீரை திறந்துவிட வேண்டும் எனவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல ஷிமோகாவில் உள்ள தாய்த்தமிழ் சங்கத்தினர் தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் பேரணியாக சென்ற தமிழ் அமைப்பினர் ஷிமோகா மாவட்ட ஆட்சியரிடம் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்தனர்.
ஊடகங்களுக்கு அறிவுரை
காவிரி விவகாரத்தில் செய்திகளை ஒளிபரப்பும் போதும், காட்சிப்படுத்தும் போதும் கட்டுப்பாடுடன் தொலைக்காட்சி சேனல்கள் செயல்பட மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுரைக் குறிப்பில், ‘சில சேனல்கள் வன்முறை காட்சிகளை தொடர்ச்சியாக காண்பிப்பது மேலும் வண்முறையை தூண்ட வழிவகுக்கும். இதனால் பதற்றமே அதிகரிக்கும், எனவே செய்தி சேனல்கள் இதை தவிர்க்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது..
மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, ‘‘ஊடகங்கள் கட்டுப்பாடுடனும் பொறுப்புடனும் செயல்படுவது அவசியம். இரு மாநிலங்களிலும் சகஜ நிலை திரும்ப ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும். செய்திகளை ஒளிபரப் பும்போது வன்முறையை தூண்டும் காட்சிகள் இடம்பெறு வதை தவிர்க்க வேண்டும். 1995-ம் ஆண்டு கேபிள் டிவி நெட்வொர்க் கட்டுப்பாட்டு சட்டத்தின் விதிமுறைகளை ஊடகங்கள் கடைபிடிக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT