Last Updated : 07 Jan, 2015 11:12 AM

 

Published : 07 Jan 2015 11:12 AM
Last Updated : 07 Jan 2015 11:12 AM

தொல்லியல் துறையில் பதிப்பிக்கப்படாமல் அழியும் தமிழ் கல்வெட்டுப் படிகள்: மைசூருவில் முடங்கும் தமிழ் வரலாறு

சுமார் நானூறு ஆண்டுகளாக, கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள இந்திய தொல்லியல் ஆய்வகக்தில் உள்ள கல்வெட்டுப் படிகளில் பல இன்னும் முழுமையாக பதிப்பிக்கப்படாமல் உள்ளன. 50 சதவீத கல்வெட்டுப் படிகள் பதிப்பிக்கப்படாமலேயே அழிந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் எஸ்.சாந்தினிபீ கூறியதாவது: கடந்த 2008- மார்ச்சில் மைசூர் தொல்லியல் அலுவலகம் புதிய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட போது, அங்கு படி எடுக்கப்பட்டு பாதுகாப்பாக பல நூறு தமிழ் கல்வெட்டுகள் வீணாகப் போய் விட்டன. அவற்றை மீண்டும் படி எடுக்க வேண்டும் எனில் அதன் மூலஆதாரங்கள் பதிக்கப்பட்ட கல்வெட்டுகளை கோயில், குளம் எனத் தேடித் திரட்ட வேண்டும். இது மிகச் சிரமமான ஒன்று.

கல்வெட்டுக்களில் படி எடுக்கப்பட்டு மைசூர் அலுவலகத்தில் சுருட்டி வைக்கப்பட்டுள்ள பலவும், நூறு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படிகள் ஆகும். படி எடுக்கப்படும் தாள்கள் சுமார் 75 ஆண்டுகள் ஆயுள் கொண்டவை. இப்போது அவையும் வீணாகப் போகும் நிலை உருவாகி உள்ளது. கல்வெட்டுகளைப் படிக்க முறையான கல்வெட்டிய லாளர்களின் பற்றாக்குறை அதிகமாகி விட்டது. இதை முன்கூட்டியே அறிந்தும் மைசூர் அலுவலகம் குறிப்பிட்ட காலத்தில் அந்த குறைகளை நிவர்த்தி செய்யத் தவறி விட்டது.

இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் பெரும் பாலானவை தமிழ் மொழியில் எழுதப்பட்டவை. மற்றவை சமஸ்கிருதம், பாரசீகம், அரபி, உருது, தெலுங்கு, கன்னடம், வங்காளம் மற்றும் மலையாள மொழிகளில் எழுதப்பட்டவை. இந்த மொழி கல்வெட்டுகள் பதிப்பிக்கும் கல்வெட்டாளர்கள் பதவிகள் நிரப்பப்படாமல் அதன் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதில், தமிழ் கல்வெட்டுகள் அதிகம் என்பதால் மற்ற மொழி கல்வெட்டுகளை விட, தமிழ் கல்வெட்டு படிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றும் கூட தமிழகத்தில் கல்வெட்டுகள் அவ்வப்போது கிடைத்து வருவதால், தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கை கூடி வருகிறது. இதனால், தமிழக வரலாறு மைசூரிலேயே முடங்கும் சூழல் நிலவுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மைசூரு அலுவலக பின்னணி

மன்னராட்சிக் காலத்தில், ஆட்சிக் காலத்தின் நிகழ்வுகளை கற்களில் செதுக்கி வைப்பது வழக்கம். கோயில், குளக்கரை, மலைகள், குகைகள் போன்ற இடங்களில் எழுதப்பட்ட இந்த கல்வெட்டுகள், இந்திய தொல்லியல் ஆய்வகம் சார்பில் காகித நகல்களாக 1889-ம் ஆண்டு முதல் படி எடுக்கப்படுகிறது. இதை ஆய்வுக்கு பயனுள்ள வகையில் இந்திய தொல்லியல் ஆய்வகம் அவ்வப்போது பதிப்பித்து வெளியிடுகிறது.

இந்திய வரலாற்றுக்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கும் இந்த பழங்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்யவும், கண்டுபிடிக்கப்படும் கல்வெட்டுகளை படி எடுத்து பதிப்பிப்பதற்கும் தொல்லியல் ஆய்வகத்தின் மைசூரு அலுவலகத்தில் தனியாக கல்வெட்டு தலைமையகம் ஒன்று இயங்குகிறது. ஆரம்பத்தில் சென்னையில் இருந்த அந்த அலுவலகம், தட்பவெட்பநிலை காரணமாக எடுத்த

படிகள் வீணாகப் போய் விடும் என ஊட்டிக்கு மாற்றப்பட்டது. அதன் இயக்குநராக பொறுப்பேற்ற மைசூரை சேர்ந்த ஒரு அதிகாரி அதை தம் சொந்த ஊருக்கு மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x