Published : 15 Jul 2018 09:34 PM
Last Updated : 15 Jul 2018 09:34 PM
குழந்தை கடத்துவோர் என நினைத்து கர்நாடகாவின், பிதார் நகர் அருகே ஐடி ஊழியரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்தது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் முகம்மது ஆசம் உஸ்மான்சாப்(வயது 28). இவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவரின் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து, கர்நாடக மாநிலம், பிதார் அருகே ஹந்தேகேரா கிராமத்தில் உள்ள நண்பர் முகம்மது பஷீர் அப்ரோஸை சந்திக்க வெள்ளிக்கிழமை சென்றனர். பஷீரைச் சந்தித்துச் சென்றுவிட்டு, முகம்மது ஆசமும், அவரின் நண்பர்களும் காரில் ஹைதராபாத்துக்கு திரும்பினர்.
அப்போது முர்கி எனும் கிராமத்தில் முகம்மது ஆசமும் அவரின் நண்பர்களும் தங்களின் காரை நிறுத்தி சிறிதுநேரம் இளைப்பாறினார்கள். அப்போது, அந்தக் கிராமத்தில் இருந்த குழந்தைகளுக்கு சாக்லெட்டுகளைக் கொடுத்தனர். இதைப் பார்த்த அந்தக் கிராமத்துக்கு மக்கள் குழந்தைகளைக் கடத்த வந்திருக்கிறார்கள் என நினைத்துள்ளனர்.
அதற்கு ஏற்றார்போல், முகம்மது ஆசம் வந்த காரும் புதிய கார் என்பதால், நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது. இதனால், கூடுதல் சந்தேகமடைந்த கிராம மக்கள் அவர்களைக் குழந்தை கடத்துவோர் என நினைத்து தாக்கத் தொடங்கினார்கள். அவர்கள் அங்கிருந்து தப்பித்து காரில் செல்ல முயன்றபோது அவர்களைப் புகைப்படம் எடுத்து அடுத்தடுத்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு வாட்ஸ் அப்பில் பரப்பியுள்ளனர்.
இதனால், அடுத்த கிராமத்தைக் காரில் கடக்கும்போது, அந்தக் கிராமத்துக்கு மக்கள் முகம்மது ஆசிமின் காரை வழிமறித்து கல்லாலும், கட்டையாலும் தாக்கினார்கள். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து, முகம்மது ஆசிமையும் அவரின் நண்பர்களையும் தாக்கியவர்களை விரட்டியடித்தனர்.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் முகம்மது ஆசிம் உயிரிழந்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இரு கிராமத்தையும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து உயிரிழந்த முகம்மது ஆசிமின் உறவினர் ஒருவர் கூறுகையில், ''எனது உறவினர் முகமது ஆசிம் அவரின் நண்பர் முகம்மது சலாம், உள்ளிட்ட 3 பேருடன் கர்நாடக மாநிலம், பிதார் அருகே இருக்கும் கிராமத்தில் இருக்கும் நண்பரைச் சந்தித்துவிட்டு ஹைதராபாத் திரும்பினார்கள். அப்போது, வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில், சிலர் குழந்தைகளைக் கடத்துவோர் என நினைத்து அவர்களைத் தாக்கினார்கள். அவர்கள் குழந்தைகளை கடத்துவோர் இல்லை எனத் தெரிவித்தும் தாக்கியதில், முகமது உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் தெலங்கானா அரசு தலையிட்டு கர்நாடக அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் கொல்லப்பட்ட முகமது அப்பாவியானவர். அவரின் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
பிதார் மாவட்ட போலீஸ் துணை ஆணையர் வி.சத்யநாராயணா கூறுகையில், ’’கிராம மக்கள் தாக்கியதில், முகமது உயிரிழந்தார், மற்ற இரு நண்பர்கள் பலத்த காயமடைந்ததால், அவர்கள் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக 30-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT